வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீது இன்று (21) மாலை 5 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், சபைக்குள் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
கேள்விகளைக் கேட்பதற்கான நேரம், எதிர்க்கட்சிக்கு வரையறுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். இதனையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தொடர்பில் எதிர்க்கட்சி கேள்வியை எழுப்புவதற்கு முற்பட்ட வேளையிலேயே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
எட்டுக் கேள்விகளை மட்டுமே கேட்க முடியுமென வரையறை செய்யப்பட்டது. எனினும், எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தனர்.
இதற்போது எழுந்த ஆளும் கட்சியின் சபைமுதல்வர் தினேஷ் குணவர்தன, “சபாநாயகரின் கட்டளைக்கு தலைவணங்குமாறு கேட்டுக்கொண்டார்.
குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ரஞ்சித் மத்தும பண்டார, “ உங்களுக்கு ஏற்றவகையில் தீர்மானிக்கமுடியாது. கட்டளையிடவும் முடியாது. தயவு செய்து பாராளுமன்றத்தின் சம்பிரதாயத்தை மதிக்கவேண்டும். சட்டத்திட்டங்களுக்கு தலைவணங்கவேண்டும். உங்களுக்கு ஏற்றவகையில் தீர்மானங்களை எடுக்கமுடியாது” என்றார்.
“நிலையியற் கட்டளைகள் இருக்கின்றன. நீங்கள் நாமல் ராஜபக்ஷ சொல்வதைப் போல செய்தீர்கள் எனில், உங்களுடைய பெயருக்கு களங்கம் ஏற்படும்” என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நான், தீர்ப்பளித்து விட்டேன். அதனை மாற்றமுடியாது. ஆகையால் சபையின் நடவடிக்கையை முன்னகர்த்திச் செல்லுமாறு கூறி, சபையை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் சென்றார்.
Akurana Today All Tamil News in One Place