நான்கு மெளலவிகள் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தின் உண்மைக் கதை

மௌலவிகள் உட்பட எண்மர் கைது ஊடகங்களில் பொய்யான செய்தி பல்லேவெல பொலிஸ் நிலையம் மூலம் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் நான்கு மௌலவிகள் உட்பட 8 பேர் ஏதோவொரு குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் என்ற எண்ணம் ஏற்படும் விதத்தில் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தாலும், அவர்கள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்று பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பஸ்யால பிரதேச வீடொன்றில் இருக்கும் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திருமண வைபவமொன்றில் கலந்துகொள்ளவே அங்கு சென்றுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட எட்டு பேருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை என்பதை அவர்கள் வசித்து வந்த பிரதேச பொலிஸ் நிலையங்கள் உறுதிப்படுத்தியதாகவும் பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் வருகைதந்த நோக்கத்தை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் பொலிஸ ர் தெரிவித்தனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, வைபவமொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததற்கமையவே குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வீட்டில் இருந்த நபர் ஒருவரிடம் வினவியபோது, ‘திருமணமொன்றுக்குச் செல்லவே அனைவரும் இங்கே வந்தனர். எவ்வித சட்ட விரோத செயற்பாடுகளும் இங்கே நடைபெறவில்லை. ஞாயிறு காலை 9மணியளவில் பொலிஸார் வந்து பரிசோதித்தனர். வந்திருந்தவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். வீடுகளில் அலங்காரத்துக்காக தொங்கவிடும் வாளொன்று இருந்தது. வேறு எதுவும் இருக்கவில்லை. பின்னர் பொலிஸார் அனைவரையும் விடுதலை செய்தனர்.’ என்று அவர் தெரிவித்தார்.

‘செய்திகளில் கல்எலிய என்று பிரசுரமாகி இருந்தாலும் இந்த வீடு கல்எலியவில் இல்லை. வேண்டுமென்றே பிரச்சினைகள் ஏற்படுத்தவே ஊடகங்கள் இவ்வாறு செய்தி பிரசுரித்துள்ளன. மத்ரஸh பாடசாலையில் கல்வி கற்ற மௌலவிகள் நால்வர் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மத்ரஸாவில் கல்வி கற்ற மௌலவிகள் இருந்ததில் குற்றமென்ன? எவ்வித சட்ட விரோத நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை. யாரோ தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். மத்ரஸாவில் கற்ற நால்வர் உட்பட சிலர் ஒன்றிணைந்து ஏதோவொரு குற்றச்செயலுக்கு தயாராகியதாக கருத்துப்படவே ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய செய்தியாகும். இந்த செய்திக்கு மத்ரஸா என்ற இடமோ, பிரயோகமோ தொடர்பே இல்லை. இது பிரச்சினையொன்றை உருவாக்க மேற்கொள்ளப்பட்டதாகும்’ என்றும் வீட்டிலிருந்தவர் தெரிவித்தார்.

இந்த 8 பேருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லையென அவர்களது பிரதேச பொலிஸ் நிலையங்கள் உறுதிப்படுத்தியதாக பல்லேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குத் தெரிவித்தார்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter