நாடு மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் நாட்டு மக்களின் செயற்பாடுகளில் திருப்தியடைய முடியாதுள்ளாக தெரிவித்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு மக்கள் கட்டுப்படாவிட்டால் தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்டதிட்டங்களுக்கு அமைய இன்று புதன்கிழமை முதல் நாடு பூராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; ஊரடங்கு தளர்த்தப்பட்டது மற்றும் நாடு திறக்கப்பட்டதன் பின்னர் மக்களின் செயற்பாடுகளில் நூற்றுக்கு நூறு வீதம் திருப்பதியடைய முடியாதுள்ளது. அதனால், தற்போதைய காலப்பகுதியில் பொலிஸில் சிவில் உடையிலுள்ளவர்களே அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு, கொழும்பு மற்றும் அதற்கு ௮ருதிலுள்ள பிரதேசங்களில் 140 CCTV கமராக்கள் உள்ளன. அதனால், அனைத்து பிரதேசங்களும் ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கப்படுவதுடன், ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன
நாங்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய நாங்கள் எதிர்பார்த்தளவுக்கு மக்களின் செயற்பாடுகளில் திருப்தியடைய முடியாதுள்ளது. குறிப்பாக, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது, சமூக இடைவெளியை கடைப் பிடிக்காது மக்கள் செயற்படுகின்றனர். அத்தோடு, அதிகளவிலான போக்குவரத்து நெரிசல்களையும் ஏற்படுத்தினர். ஆகவே, நாடு திறக்கப்பட்டு இன்றுடன் (நேற்றுடன்) இரு நாட்களாகியுள்ள நிலையில் சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு மக்கள் கட்டுப்படாவிட்டால் அல்லது பழக்கப்படாவிட்டால் தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்டத்திட்டங்களுக்கு அமைய நாளை (இன்று) முதல் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்.
குறிப்பாக, கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கும் அதனை ஒழிப்பதற்கும் சந்தை வியாபாரிகள், ஹோட்டல்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் என அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்.
இது நாடு முழுவதிலும் செயற்படுத்தப்படும். ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களிலும் சுகாதார ஆலோசனைகளுக்கு கட்டுப்பட அல்லது பழக்கப்பட வேண்டும். அதேபோன்று, அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதை நாளை (இன்று) முதல் புலனாய்வு துறையினரினால் மேற்பார்வை செய்யப்படும் என்றார்.
Akurana Today All Tamil News in One Place
