கொழும்பு, மாளிகாவத்தை மையவாடியில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக யெமன் வம்சாவளி குடும்பமொன்றுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலப்பரப்பின் எல்லை அடையாளங்கள் மற்றும் கற்கள் சில தினங்களுக்கு முன்பு திடீரென அகற்றப்பட்டுள்ளன. இந்த புராதன சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளமைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபையினாலேயே பரிபாலிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் ‘விடிவெள்ளி’ கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் தெளபீக் சுபைரைத் தொடர்புகொண்டு வினவிய போது அவர் பின்வரு மாறு விளக்கினார்.
‘இந்த அரபு வம்சாவளி குடும்பத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியைக் குறிக்கும் வகையில் நடப்பட்டிருந்த புராதன கற்கள் எனக்குத் தெரியாமலே அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இது பற்றி எனக்கு அறிவிக்கப்படவில்லை. பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர் ஒருவரே நிர்வாகத்தின் அனுமதியின்றி இதற்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த ஜனாஸா கட்டமைப்பு அப்புறப்படுத்தப்படுவதாக எனக்கு அறியக் கிடைத்ததும் கடந்த 3ஆம் திகதி தொலைபேசி மூலம் இதனை உடன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தேன். 4ஆம் திகதி உத்தியோகபூர்வமாக உத்தரவு பிறப்பித்தேன்.
தற்போது அந்த ஜனாஸா கட்டமைப்பு நிலப்பரப்பில் அரபு எழுத்துக்களுடன் கூடிய 1357ஆம் ஆண்டு என பொறிக்கப்பட்ட புராதன கல் ஒன்றே எஞ்சியுள்ளது. அகற்றப்பட்டுள்ள கட்டமைப்பை மீண்டும் நிறுவித்தருவதாக குறிப்பிட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கு தெரிவித்திருக்கிறோம்.
இந்த புராதன ஜனாஸா கட்டமைப்பு ஏன் அகற்றப்பட்டது? அதன் .நோக்கம் என்னட் என்பது தெரியாது. மாளிகாவத்தை மையவாடியில் இவ்வாறு குடும்பங்களுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட 23 பகுதிகள் உள்ளன. முன்னைய காலத்தில் பள்ளிவாசலுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கும், உதவிகள் செய்தவர்களுக்கும் இவ்வாறான பிரத்தியேக நிலப்பரப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அப்புறப்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட அரபு குடும்ப ஜனாஸா கட்டமைப்பு தற்போது மீள புனரமைக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் பரிபாலன சபை கூடி ஆராயவுள்ளது. பரிபாலன சபையின் தீர்மானத்துக்கமைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.
இதேவேளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக் களத்தின் கள உத்தியோகத்தர் அடங்கிய குழுவொன்றும் மாளிகாவத்தை மையவாடிக்கு நேரடி விஜயமொன்றினை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தது. அக் குழுவின் அறிக்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரபிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாநகர சபை உறுப்பினா் ஒருவரின் முயற்சியினாலேயே குறிப்பிட்ட ஜனாஸா கட்டமைப்பு அகற்றப்பட்டு அவ்விடத்தை தனியார் வாகன தரிப்பிடத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாளிகாவத்தை மையவாடியில் அமையப்பெற்றுள்ள ஸியாரம் ஒன்று உடைத்து அப்புறப்படுத்தப்பட்டதாக ஊடகங்களிலும், சமூக வலைத்தலங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டன. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு வினவிய போது, அங்கு ஸியாரம் ஒன்று அமையப் பெற்றிருக்கவில்லை எனவும் நாட்டில் 82 ஸியாரங்களே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மாளிகாவத்தை மையவாடியில் ஸியாரம் இருப்பதாக பதிவுப்பதாக பதிவு செய்யப்பட்டில்லை எனவும் தெரிவித்தனர்.
Akurana Today All Tamil News in One Place