நாட்டில் வியாபித்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு முறையாகத் தீர்வுகாணும் நோக்கில் நாட்டுமக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இந்த மாநாட்டின் பின்னர் வெளிநாட்டு உளவுப்பிரிவொன்றினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டமொன்று தொடர்பில் அம்பலப்படுத்துவோம் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பினால் இன்று கிருலப்பனையிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெளிநாட்டு உளவுப்பிரிவின் சதித்திட்டம் குறித்து நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தவுள்ளதாக முன்னர் பொதுபலசேனா அமைப்பு கூறியிருந்த போதிலும், பாதுகாப்புக் காரணிகளைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாடு நிறைவடைந்ததும் அதனை வெளிப்படுத்துவதாக ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
பொதுபலசேனா அமைப்பு நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிற்கு பண்டாரகம, அடுளுகம என்ற பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவரையும் அழைத்து வந்திருந்தது.
சிங்கள பௌத்தர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட அந்த முஸ்லிம் பெண், முஸ்லிம் அல்லாத ஒருவரைத் திருமணம் செய்தமைக்காகத் தனது சமூகத்தவரால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டார். அடுளுகம, மாராவ பள்ளிவாசலைச் சேர்ந்தவர்களே தன்னை அச்சுறுத்தியதாகவும், தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் குற்றஞ்சாட்டிய அந்தப் பெண், தனது 11 வயது மகளை முஸ்லிம் நபரொருவருக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு அவர்கள் கேட்டதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டள்ள நிலையிலேயே நேற்றையதினம் அவர் இந்த விடயங்களைப் பகிரங்கப்படுத்தினார்.
Akurana Today All Tamil News in One Place