கொரோனா காலத்துடன் ஒப்பிடும்போது, சிறுவர்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள், வன்கொடுமைகள், வீடுகளில் வேலைக்கு அமர்த்தல், விபத்துகளில் சிக்குதல், தீய பழக்கங்களுக்கு அடிமையாதல், பாலியல் வன்கொடுமைகள் என்பன தற்போது அதிகரித்துள்ளன.
இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், சிறுவர்களுக்கு போதியளவான போஷாக்கான உணவு கிடைக்காமையால், புரத குறைப்பாடு அதிகரிக்கிறது. இவற்றுக்கு மத்தியில் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித் துக்கொண்டே செல்கின்றன.
தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் மூன்று நாள்களாக உணவு கொடுக்க முடியாத தாயொருவர் வெறும் தண்ணீரை மட்டுமே பருகக்கொடுத்து உயிர்மூச்சு கொடுத்திருந்தார். தன்னுடைய பிள்ளைகள் படும் வேதனையை கண்டு மனமுடைந்துபோன அந்தத் தாய், தன்னுயிரை மாய்த் துக்கொள்வதற்கு முயன்று, இறுதியில் உயிருக்காக ஊசலாடிக்கொண்டிருக்கின்றார்.
பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து, சவால்களை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போடுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் சிறுசிறு தோல்விகளிலும் கூட, விபரீதமான முடிவுகளை எட்டும் எண்ணம் வளர்ந்துவிடும். அதனால்தான், சிறுவர்கள் வெற்றி பெறும்போது வாழ்த்தவும் தோல்வியடையும் போது தட்டிக்கொடுக்கவும் பழகிக்கொள்ள வேண்டும்.
முடிந்தளவு ஏதாவது ஒரு சிறிய தொழிலை செய்தால்கூட, ஒரளவுக்கு வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கலாம். அதிலும், குடும்பத்தலைவன் ஊதாரித்தனமாக செலவழிக்காமல், கிடைப்பதில் சிறுதொகையை மிதப்படுத்தி சேமித்துக்கொள்ளவே வேண்டும்.
இந்நிலையில், சிறுவர்கள், பெண் பிள்ளைகள் காணாமல்போகும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன. சிறார்களை தன்னுடைய கணவன் அல்லது உறவினர்களின் வீடுகளில் விட்டு, வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் சமூக சீரழிவுகளைத் தவிர்க்கவே முடியாது. வேலையில்லாமல் வீடுகளில் இருப்போரும், வீதிகளில் சுற்றிதிரிவோரும், தங்களுடைய வன்கொடுமையை சிறார்களின் மீது காண்பித்துவிடுகின்றனர். இதனால், சில சிறுவர்களின் எதிர்காலமே பூஜ்ஜியமாகிவிடுகிறது.
சிறுவர்களுக்கென ஓர் உலகமிருக்கிறது. அதனை அனுபவிப்பதற்கு இடமளிக்க வேண்டும். நெருக்கடிமிக்க இந்தச் சூழ்நிலையில், குடும்ப சுமையையும் சுமக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையும் சில சிறார்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புத் தொடர்பில் சிறார்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். கவனம், அவதானம், பதற்றமின்மை, அச்சத்தை போக்குதல் உள்ளிட்டவற்றில் ஓரளவுக்கேனும் பயற்சி கொடுத்து, மனதைத் திடப்படுத்துவதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையேல், விறகு சேகரிப்பதற்காக மரத்திலேறிய சிறுவனொருவன், மஸ்கெலியாவில் மரணித்த சம்பவத்தைப் போல எதிர்காலத்தில் இடம்பெறக்கூடும்.
கொரோனா அதற்குப் பின்னரான நெருக்கடியான காலக்கட்டத்தில் கூடுதலான நேரங்களை வீடுகளிலேயே சிறுவர்கள் கழிக்கின்றனர். ஆகையால், பெற்றோரின் அரவணைப்பின் கீழிருக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும். அந்த நேரங்களில், நல்லபல விடயங்களைக் கற்றுக்கொடுத்து. அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதுடன் பெற்றோர்களாகிய நீங்கள் விழிப்புடன் இருப்பதே காலத்தின் தேவையாகும். (தமிழ்-மிர்ரர் 13/6/22 Page 6)
Akurana Today All Tamil News in One Place