மட்டக்குளி – காக்கை தீவு கடற் கரையில், கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட கொழும்பு – பாலத்துறை ‘ அருண’ எல்லே விளையாட்டுக் கழகத் தலைவர் அகில சம்பத் ரத்னசிறியின் படுகொலையை வழிநடாத்தியதாக கூறப்படும் இராணுவத்தின் கட்டளை தல அதிகாரியான லெப்டினன் கேர்ணல் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளைத் தல அதிகாரியாக செயற்பட்ட ஆர்.எம். தனுஜ சமந்த திலகரத்ன எனும் லெப்டினன் கேர்ணலே, கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது அவரை நாளைய தினம் வரை விளக்கமரியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் டி.ஜே. பிரபாகரன் உத்தரவிட்டார்.
நேற்று இரவு, இராணுவ பொலிசார் ஊடாக, கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நலின் பிரியந்தவிடம் கையளிக்கப்பட்ட சந்தேக நபர், குறித்த எல்லே வீரரின் கொலையை வழிநடாத்தியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் குறித்த லெப்டினன் கேர்ணல் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி குற்றச்சாட்டை மறுத்தார்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் உள்ளிட்ட 14 இராணுவத்தினரும் மட்டக்குளி – சமிட்புர பிரதேசத்தின் கிராம சேவகரான பெண்ணும் கைது செய்யப்பட்டு விளக்கமரியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 15 பேரினதும் விளக்கமறியல் காலமும் நாளை முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்ட எல்லே வீரர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிராமசேவகரின் கணவர் என்பது விஷேட அம்சமாகும்.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி இராணுவ முகாமில் கடமையாற்றிய, புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் உள்ளிட்ட 14 பேரை இராணுவ பொலிஸ் பிரிவு கைது செய்து மேலதிக விசாரணைக்ளுக்காக பொலிசாரிடம் ஒப்படைந்திருந்து.
இந் நிலையில் பொலிஸார் பெண் கிராம சேவகரைக் கைது செய்திருந்தனர். குறித்த விசாரணைகளில், புலனாய்வு பிரிவின் கோபரல் மற்றும் கிராமசேவகரான பெண்ணுக்கிடையே நிலவிய தகாத உறவின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் குறித்த எல்லே வீரர் பயணித்துக்கொன்டிருந்த போது, இரானுவ கெப் வாகங்களில் பயணித்த சந்தேக நபர்கள் அவரைக் கடத்தி சித்திரவதை செய்து கொலைச் செய்த பின்னர் களனி கங்கையில் சடலத்தை வீசியுள்ளனர். அவரது மோட்டார் சைக்கிளையும் பகுதி அகுதிகளாக பிரித்து களனி கங்கையில் வீசியுள்ளனர்.
இந் நிலையில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி, முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் , மட்டக்குளி – காக்கை தீவு கடற் கரையில் ஒதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
அது தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவுக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிவான் நீதிமன்ற விசாரணைகளும் இடம்பெற்றன.
இது தொடர்பில் இடம்பெற்ற மேலதிக விசாரணைகளிலேயே, அது ஒரு கொலை என தகவல்கள் வெளிபப்டுத்தப்பட்டு, தற்போது 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எம்.எப்.எம்.பஸீர்) -வீரகேசரி-
Akurana Today All Tamil News in One Place