கொவிட்தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை தொடர்ச்சியாக முடக்கி வைக்க முடியாது. நாடு விரைவாக வழமை நிலைக்கு திரும்ப வேண்டும். இல்லாவிடின் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும். என்று நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
அரசாங்க தகவல்திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
கொவிட் தாக்கத்தினை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டம் நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனின் பொருளாதார பாதிப்பினை நாட்டு மக்கன் அனைவரும் ஏதாவதொரு வழியில் எதிர்கொள்ள நேரிடும்.
கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தி நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் இவ்விரு துறைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல்வேறு தரப்பினரது கோரிக்கைக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் கடுமையான முறையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும். அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தினால் தேசிய பொருளாதாரத்திற்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படும். நாட்டை முழுமையாக முடக்கும் போது மொத்த தேசிய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும். அதாவது தற்போது ஒரு நாளைக்கு 15 பில்லியன் ரூபா பெறுமதியான மொத்த தேசிய உற்பத்தி கிடைக்கப் பெறுகிறது. ஆனால் சாதாரண தினத்தில் மொத்த தேசிய உற்பத்தி வருமானம் 41 பில்லியன் ரூபா அளவில் கிடைக்கப் பெறும்.
யுத்த காலத்தில் நாட்டை முடக்கவில்லை. பொருளாதாரத்தை வளர்ச்சி பெற செய்ததாலேயே யுத்தத்தை எதிர்கொள்ள முடிந்தது. பொருளாதாரம் முன்னேற்றமடைந்தால் மாத்திரமே தற்போதைய கொவிட் நெருக்கடியையும் வெற்றி கொள்ள முடியும். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால். கொவிட் வெற்றி பெறும்.
நாடு தழுவிய நீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதால் சுமார் 65 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. ஆகவே அனைத்து பிரச்சினைகளையும் பொறுமையுடன் கையான வேண்டும். ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றார். (இராஜதுரை ஹஷான்)
Akurana Today All Tamil News in One Place