திஹேக்: மியான்மரில் ராணுவ தளபதிகளின் உத்தரவுகளை ஏற்று கண்ணில்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களை நூற்றுக்கணக்கில் சுட்டுப் படுகொலை செய்தோம்;
பலாத்காரம் செய்து கொன்று புதைத்தோம் என்று அந்நாட்டு முன்னாள் ராணுவ வீரர்கள் இருவர் அளித்திருக்கும் வாக்குமூலம் உலகையே அதிர வைத்துள்ளது.
21-ம் நூற்றாண்டில் உலகை உலுக்கியது மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை. ரோஹிங்யாக்களை பயங்கரவாதிகளாக பிரகனப்படுத்தி மியான்மரை விட்டு துரத்திவிட்டது அந்த நாடு.
பல லட்சம் ரோஹிங்யாக்கள் தேசாந்திரிகளாக, அகதிகளாக குற்றுயிரும் குலை உயிருமாக நாடுவிட்டு நாடு ஓடிப்போனார்கள். அப்படிப் போனவர்களில் மியான்மர் ராணுவத்தால் படுபாதக இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். இது தொடர்பாக திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கும் நடைபெறுகிறது. ஆப்பிரிக்காவின் காம்பியா நாடுதான் இது தொடர்பாக வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜனநாயகப் போராளியாக புகழப்பட்ட ஆன்சான் சூகி, போர்க்குற்றம் சுமத்தப்பட்ட அரசுக்காக அரசின் ஆலோசகராக நேரில் ஆஜரானது வரலாற்று விசித்திரம்.
இந்த நிலையில் மியான்மர் ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய 2 வீரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் திஹேக் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ரோஹிங்யாக்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும் புதைத்துவிடவும் உத்தரவு வந்ததாகவும் அதனடிப்படையில் ரோஹிங்யா முஸ்லிம்களை படுகொலை செய்ததாகவும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.
அந்த இருவரும் எத்தனை எத்தனை ரோஹிங்யா முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தோம்; பலாத்காரம் செய்தோம் எப்படி கொன்று புதைத்தோம் என்றெல்லாம் நெஞ்சை பதறவைக்கும் வகையில் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.
இந்த வாக்குமூலங்கள் உலகின் நீதியின் கண்களைத் திறந்து மியான்மர் அரசை தண்டிக்குமா? தப்பிக் கொண்டிருக்கும் இலங்கை போன்ற போர்க்குற்ற அரசுகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமா? என்பது விரைவில் தெரியும்.
Akurana Today All Tamil News in One Place