பிரான்சின் உற்பத்தி பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஸ்கரிக்க வேண்டும்

முஸ்லிம்களின் உயிர் மூச்சாக மதிக்கப்படும் இறைதூதர் முஹம்மது நபியைக் கேலி செய்ய அனுமதித்த பிரான்ஸின், உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஷ்கரிக்க வேண்டும் எனஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ள ஐரோப்பா, மத நிந்தனைகளைக் கண்டு மகிழ்ச்சியுறுவது கவலையளிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நடந்து கொண்ட விதம் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்கள் குறித்து ஹாபிஸ் நஸீர் அஹமட் எம்பி தெரிவித்துள்ளதாவது;

தங்களது உயிரை விடவும் இறைதூதர் முஹம்மது நபியை முஸ்லிம்கள் மேலாக மதிக்கின்றனர். இஸ்லாம் வலியுறுத்தும் மறுவுலக வாழ்வின் ஈடேற்றத்துக்கு முஹம்மது நபியின் “ஷபாஅத்” பரிந்துரை அவசியம் என்பதும் முஸ்லிம்களின் நம்பிக்கை. இதற்காகத்தான் நாளாந்தமும் ஐவேளைத் தொழுகையிலும் நபிமீது ஸலவாத்துச் சொல்கிறோம்.அருள்மறை விளக்காகத் திகழும் இத்தனை முக்கியம் வாய்ந்த இறைத்தூதரை ஐரோப்பா தொடர்ந்தும் கேலி செய்தே வருகிறது.

சிலுவை யுத்த தோல்வியாளார்களின் மன விகாரங்கள் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் வெளிப்படுவதாகவே முஸ்லிம் உலகம் இதைக் கருதுகிறது.

மனிதர்களிடையே மோதலைத் தூண்டி இரத்தத்தை ஓடச் செய்யும் இவ்வாறான கருத்துச் சுதந்திரங்கள் அவசியம்தானா, இதுபற்றி ஐரோப்பா ஏன் சிந்திக்கவில்லை? சத்திய இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களே இவ்வாறான இழி செயலைப் புரிகின்றனர்.

இதிலிருந்தாவது இஸ்லாம் வாளாலும் பலவந்தத்தாலும் பரப்பப்படவில்லை என்பதை ஐரோப்பா குறிப்பாக டென்மார்க் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். மிகப் பெரிய கலாசார மோதல்களுக்குத் தூபமிடும் இவ்வாறான இழி நோக்குடைய கருத்துச் சுதந்திரத்தை பிரான்ஸ் உடனடியாக நிறுத்துவது அவசியம்.நிறுத்தும் வரைக்கும் அந்நாட்டின் உற்பத்திப் பொருட்களை முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன.

இதைப் பின்பற்றி இலங்கை முஸ்லிம்களும் பிரான்ஸின் பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும்.மொழி,நிறம்,பிரதேசம் கடந்து மதத்தால் ஒன்றிணைந்த முஸ்லிம்களின் உணர்வுகள் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளதுதான் எமது பலம். கொரோனாவின் கொடிய அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது முஸ்லிம் உலகம் ஒன்று கூடிப் பிரான்ஸைக் கண்டிக்கின்றமை, உயிரை விடவும் முஸ்லிம்கள் இறைதூதர் முஹம்மது நபியை நேசிக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page