ரியலிட்டி ஷோ – சிறுவர்கள் துஷ்பிரயோகம்; அரசு எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள், விளம்பரங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு குரல் கொடுப்பது போன்றவற்றில் சிறுவர்களை பயன்படுத்துவது தொடர்பில் கடுமையான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்கு பயன்படுத்துவதை தடைசெய்வது தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரன தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி நாட்டிலுள்ள அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டியிருக்கும் என்றும், அவ்வாறு இணங்கத் தவறும் அலைவரிசைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு சபைக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதனடிப்படையில் இது தொடர்பாக வெகுஜன ஊடக அமைச்சகத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், வழிகாட்டுதல்களின் வரைவு கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் முதித்த விதானபத்திரன தெரிவித்தார்.

ஒரு தனியார் தொலைக்காட்சி நிலையத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவுக்கான மேடை அமைப்பாளரான  54 வயதான நபர் ஒருவர் பன்னிபிட்டியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page