முஸ்லிம்களின் மரணம் கூட நிம்மதியானதாக இருக்காது என்பதை உறுதி செய்ய இலங்கை அரசு கொரோனாவை பயன்படுத்துகிறது! – சர்வதேச மன்னிப்புச் சபை

அடக்குமுறைக்கும் அச்சத்துக்கும் உட்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தை மேலும் வலுவிழக்கச் செய்வதற்கான வழிமுறையையே இலங்கை அரசாங்கம் தெரிவு செய்திருக்கிறது.

நாட்டுமக்கள் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்த வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை இலங்கை அரசாங்கம் மறந்து விடக் கூடாது என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியிருக்கிறது.

இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய அலுவலகத்தின் தொடர்பாடல் மற்றும் பிரசார உதவியாளர் ரெஹாப் மஹமூர் பின்வருமாறு கருத்து வெளியிட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பெரும் எண்ணிக்கையானோர் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று ஏற்படல், தம்மால் வைரஸ் தொற்று பிறருக்குப் பரவுதல், தமது அன்பிற்குரியவர்கள் வைரஸ் தொற்றினால் துன்பப்படுவதைக் காணுதல் மற்றும் அவர்களின் மரணத்தை எதிர்கொள்ளல் உள்ளிட்ட அச்சம் பலர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், மேற்கூறப்பட்ட அச்சத்துக்கு மேலாக தமது அன்புக்குரியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களை அடக்கம் செய்ய முடியாது என்றும் அவர்களுக்கான இறுதி கௌரவத்தை அளிக்க முடியாது என்றும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் நாட்டில், தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது மதரீதியான நம்பிக்கையின் பிரகாரம் அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன் அந்த சடலங்கள் வலுக் கட்டாயமாகத் தகனம் செய்யப்படுகின்றன. இது இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதற்கு இயலாத சூழ்நிலை காணப்படுவதுடன் அவர்கள் மீதான வன்முறைகள் குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், தற்போது முஸ்லிம்களின் மரணம் கூட நிம்மதியானதாக இருக்காது என்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் கொவிட் – 19 என்ற காரணத்தைப் பயன்படுத்திக் கொண்டிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page