உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளுக்கு அமையவும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவும் சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ள நிலையில், நேற்று முன்தினம் நால்வா் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவி௯ரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் வீடியோக்களை பகிர்ந்த குற்றச்சாட்டில் இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதான நபர் ஒருவரும் திஹாரியைச் சோந்த 32 வயதான நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கட்டாரில் தங்கியிருந்த போது வட்ஸ் அப் குழு ஒன்றின் மூலம் சஹ்ரானின் தீவிரவாத கருத்துக்களைப் பகிரந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ‘வன் உம்மா’ எனும் பெயரிலான இந்த வட்ஸ் அப் குழுவை இவர்கள் கட்டாரில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த போது இயக்கியதாகவும் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி இவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மூதார் பிரதேசத்தில் 2018 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சஹ்சானின் தீவிரவாத போதனை வகுப்புகளை நடாத்த உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூதூரைச் சோந்த 37 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேற் படி நால்வரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர்.
மத்ரஸா விரிவுரையானர்கள் இருவர் கைது
இதனிடையே புத்தளம் பிரதேசத்தில் உள்ள மத்ரஸா ஒன்றில் பணி புரிந்த இருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த மார்ச் 25 ஆம் திகதி கைது செய்துள்ளன.
இவர்களிருவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமையவே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் மற்றும் மதுரங்குளி பகுதியைச் சோந்த 26, 27 ஆகிய வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களால் செயற்படுத்தப்பட்டு வரும், மேற்படி மத்ரஸா பள்ளியில் சஹ்ரான் ஹாஷிம் வகுப்புகளை நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதே மத்ரஸாவின் அதிபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே எதிர்வரும் நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக அமைச்சர்களான சரத் வீரசேகர மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தெரிவித்துள்ளனர். சிங்கள ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஏற்களவே ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.