நீதியமைச்சர் அலி சப்றி அடுத்த வாரம் தீர்மானகரமான விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து இந்த அறிக்கை அமையும் என தெரியவருகிறது.
முஸ்லிம் ஜனஸாக்கள் தொடர்பாக நீதியமைச்சர், அரசாங்கத்துடன் மாத்திரமல்லாது முஸ்லிம் சமய தலைவர்களுடனும் பல முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் சமய தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் பின்னர் நீதியமைச்சர் அரசாங்கத் தரப்புடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் கொரோனாவால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என இறுதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் நீதியமைச்சர் அடுத்த வாரம் வெளியிட உள்ள அறிக்கை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுடன், அது முஸ்லிம்களின் சமயம் சம்பந்தப்பட்ட உரிமை எனவும் நீதியமைச்சர் கூறியிருந்தார்.
நீதியமச்சரின் இந்த கருத்துக்கு சிங்கள அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருவதுடன் ஒரு நாட்டில் ஒரு சட்டமே இருக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
இதன் காரணமாக நீதியமைச்சர் அலி சப்றி முஸ்லிம் சமூகத்தில் இருந்து கடும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது.