கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்காவிட்டால் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என்று அஸாத் சாலி தெரிவித்திருக்கிறார். அவ்வாறெனின் அவர் தற்கொலைக் குண்டுதாரியாக மாறப்போகின்றாரா? அஸாத் சாலி உள்ளடங்கலா இவ்வாறு அடிப்படைவாத நோக்கில் செயற்படும் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியிருக்கிறார்.
கொழும்பில் இன்று (06) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஒட்டுமொத்த உலக நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் வைரஸ் தொற்றினால் உயிரிழப்போர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களது சடலங்களைத் தகனம் செய்யவேண்டும் என்ற தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களுக்கு மாத்திரமே தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டதுடன் ஏனைய நோய்களால் உயிரிழப்போரின் சடலங்களுக்கு அவர்களது மதமுறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.