மத்ரஸாக்கள் தடை செய்யப்பட்டு, முஸ்லிம் சட்டங்களை ஒழிக்க வேண்டும் – ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும். அத்தோடு ‘ஒரே நாடு, ஒரே சட்டம் ’ என்ற அடிப்படையில் இலங்கையில் அமுலிலுள்ள கண்டியர், தேச வழமை, முஸ்லிம் தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென ஹெல பொது சவிய அமைப்பின்  தலைவர் புதுகல ஜினவங்ச தேரர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மத்ரஸா பாடசாலைகளுக்கு ஏனைய அரச, தனியார், சர்வதேச பாடசாலைகளுக்கு போன்று கல்விச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பாரளுமன்றத்தில் பாரளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிப்பதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அரசாங்கத்தின் நிலைப்பாடா இது? இலங்கையிலிருந்து சூபி முஸ்லிம்கள் படிப்படியாக வஹாப் வாதத்துக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு மத்ரஸா பாடசாலைகளே பிரதான காரணமாகும். கடந்த காலங்களில் சவூதி மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஆசிரியர்கள் வந்து இங்கு அடிப்படைவாதத்தைப் போதித்துள்ளார்கள்.

இலங்கையில் 1600 மத்ரஸா பாடசாலைகள் இருக்கின்றன. இங்கு ஷரீஆ சட்டம், அரபு மொழி, வஹாபிஸம் போன்ற அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது. இது நாட்டின் பொதுக் கல்வி முறைக்கு பொருத்தமற்றதாகும். இங்கு அடிப்படைவாதிகளே உருவாக்கப்படுகிறார்கள்.

இதனால் மத்ரஸா பாடசாலைகள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இது உங்கள் அரசின் கீழ் நடைபெறாது என்பது கல்வி அமைச்சின் கருத்து மூலம் உறுதியாகியுள்ளது.

‘.ஒரே நாடு, ஒரே சட்டம் ’ என்று வாக்குறுதியளித்ததனாலே பெரும்பான்மை சமூகம் உங்களுக்கு வாக்களித்தது. அதனால் கண்டியர் சட்டம், தேசவழமை சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என்பவற்றை இல்லாதொழிக்க வேண்டும். இது தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page