ஹிஸ்புல்லாஹ்வின் ‘பெட்டிகலோ கெம்பஸ்’ நிறுவனத்தின் வங்கிக்கணக்கு தொடர்பில் வெளியான தகவல்கள்

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர், எம்.எல்.எம்.ஏ.எல். ஹிஸ்புல்லாஹ்வுக்கு சொந்தமான  பெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான, இலங்கை வங்கியின் கொள்ளுபிட்டி கிளையில்  உள்ள வங்கிக்கணக்கு  தொடர்பில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம்  திகதி உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதல்களின் பின்னரேயே சந்தேகம் எழுந்ததாக நேற்று வெளிப்படுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்தே  அவ்வாண்டு ஜூலை மாதத்தில் அந்த வங்கிக்கணக்கு தொடர்பில் மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டது.

இலங்கை வங்கியின் கொள்ளுபிட்டி கிளையின் முன்னாள் முகாமையாளர்  ஐ.சி.கே. கண்ணங்கர, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில்  நேற்று சாட்சியம் வழங்கும் போதே மேற்படி விடயம்  வெளிப்படுத்தப்பட்டது.

2016 ஆம் ஆண்டு முதல், பெட்டிகலோ கெம்பஸ் பிரைவட் லிமிடட் எனும் குறித்த நிறுவனத்தின் 78495137 எனும் நடைமுறை கணக்குக்கு 3640939488 ரூபா 72 சதம் வெளிநாட்டிலிருந்து கிடைத்துள்ளதாகவும், பல்கலைக்கழக கட்டுமாணங்கள்,  காணி கொள்வனவு போன்ற விடயங்கள் வெளிப்படையாக இடம்பெற்றதால்  அவ்வாறு கிடைத்த பணம் தொடர்பில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை எனவும்,  சிரேஷ்ட அரச சட்டவாதி சுகர்ஷி ஹேரத் ஜயவீரவின் கேள்விகளுக்கு பதிலளித்து குறித்த வங்கிக் கிளை முன்னாள் முகாமையாளர் சாட்சியமளித்தார். 

அதனால் இலங்கை வங்கி குறித்த வங்கி பணக்  கொடுக்கல் வாங்கல் தொடர்பில் திருப்தியடைந்ததாகவும்,  அதி அபாயகரமான கணக்காக மத்திய வங்கிக்கு குறித்த வங்கிக் கணக்கை அறிவிக்க தேவை ஏற்படவில்லை எனவும் அந்த முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.

 எவ்வாறாயினும் இந்த வங்கிக்கணக்கு தொடர்பில் கொள்ளுபிட்டி கிளை கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு, சந்தேகத்துக்கு இடமான வங்கிக்கணக்குகள் குறித்து ஆராயும் இலங்கை வங்கியின் தலைமை அலுவலக கிளைக்கு அறிவித்திருந்ததாகவும், அப்போது அவர்கள் அதனை ஆய்வு செய்து, சந்தேகத்துக்கு இடமான  செயற்பாடுகள் இல்லை என்பதை உறுதி செய்ததாகவும், அதனால் அது தொடர்பில் மத்திய வங்கிக்கு தலைமையகம் அறிவித்திருக்கவில்லை எனவும் முன்னாள் கொள்ளுபிட்டி வங்கிக் கிளை முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து ஆணைக் குழுவில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்த வண்ணம் சாட்சியமளித்த இலங்கை வங்கியின் கொள்ளுபிட்டி கிளையின் முன்னாள் முகாமையாளர்  ஐ.சி.கே. கண்ணங்கர,

‘ பெட்டிகலோ கெம்பஸ் பிரைவெட் லிமிடட் கணக்குக்கு, கடந்த 2016 மார்ச் 4 ஆம் திகதி 695824072 ரூபா 90 சதமும், 2016.05.05 அன்று 564110466 ரூபாவும், 2016.08.03 ஆம் திகதி 526919267 ரூபா 36 சதமும் 2016.10.05 ஆம் திகதி 424671683 ரூபா 98 சதமும் வெளிநாட்டிலிருந்து வைப்புச் செய்யப்பட்டுள்ளன.  

இதனைவிட மேலும் 541184733 ரூபா 33 சதமும், 2017.03.03 அன்று 438001538 ரூபா 68 சதமும், 2017.06.07 ஆம் திகதி 450227726 ரூபா 36 சதமும் வெளிநாட்டிலிருந்து கிடைத்துள்ளன. 

7 சந்தர்ப்பங்களில் குறித்த கணக்குக்கு வெளிநாட்டிலிருந்து இவ்வாறு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.  சவூதி அரேபியாவைச் சேர்ந்த அலி அப்துல்லாஹ் அல் ஜுபாலி எனும்  தனவந்தர் ஊடாக இப்பணம் அனுப்பட்டுள்ளது. இவை அமெரிக்காவின் வங்கி ஒன்றூடாகவே இலங்கைக்கு அனுப்பட்டுள்ளன.

 இந்த பணம் நேரடியாக கொள்ளுபிட்டி கிளையில் உள்ள குறித்த தனியார் நிறுவன வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படமாட்டாது. மாற்றமாக இலங்கை வங்கியின் தலைமை அலுவலகம் ஊடாக  அதன் உறுதித் தன்மை பரீட்சிக்கப்பட்ட பின்னரேயே இந்த கணக்கில் வைப்பிலிடப்படும்.

 பெட்டிகலோ கெம்பஸ் பிரைவெட் லிமிட்டடின் பணிப்பாளர் சபை 2019.01.04 ஆம் திகதி மாற்றமடைந்துள்ள நிலையில், அதன் பின்னர் குறித்த கொள்ளுபிட்டி கிளையில் உள்ள நடை முறைக் கணக்கை  ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், ஹிபாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரே கையாண்டுள்ளனர் என சாட்சியமளித்தார்.

 தன்போது,  இந்த பணம் என்ன நடவடிக்கைகளுக்கு உபயோகப்படுத்தபப்டுகின்றது என ஆராய்ந்து பார்கவில்லையா என  ஆணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் இலங்கை வங்கியின் கொள்ளுபிட்டி கிளையின் முன்னாள் முகாமையாளர்  ஐ.சி.கே. கண்ணங்கரவிடம் கேள்வி எழுப்பினார்.

 அதற்கு பதிலளித்த அவர்,  வங்கியில் ஏதேனும் திட்டத்துக்காக கடன் பெற்றிருப்பின், கடன் தொகை குறித்த திட்டம் தொடர்பில் செலவிடப்பட்டுள்ளதா என வங்கி ஆராயும். எனினும் வைப்புத் தொகை எதற்காக பயன்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பில் வங்கி ஆராயும்  நடைமுறை ஒன்று இல்லை என தெரிவித்தார்.

இதன்போது ஆணைக் குழுவின் தலைவர் நீதிபதி ஜனக் டி சில்வா, இலங்கை வங்கியின் கொள்ளுபிட்டி கிளையின் முன்னாள் முகாமையாளர்  ஐ.சி.கே. கண்ணங்கரவை நோக்கி, உங்கள் தனி முடிவின் படி இந்த வங்கிக்கணக்கு தொடர்பில் நீங்கள் செயற்பட்டுள்ளீர்கள் அல்லவா? என வினவினார்.

 அதற்கு பதிலளித்த அவர், ‘ தனி முடிவின் கீழ் செயற்படவில்லை.  குறித்த கணக்கு தொடர்பிலான அனைத்து தகவல்கலையும் தேவையான நேரங்களில் வங்கியின் தலைமை அலுவலகத்து வழங்கி அவர்களது ஆலோசனைக்கு அமைய செயற்பட்டுள்ளேன்.

ஏதேனும் ஒரு கணக்கு சந்தேகத்துக்கு உரியதெனின் அது தொடர்பில் எச்சரிக்கை ஒன்று கிடைக்கும். அது வங்கிக் கட்டமைப்பு  ஊடாக தலைமை அலுவலகத்தின் அது சார்ந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரியின் கவனத்துக்கு செல்லும்.  அவர் அவ்வங்கிக்கணக்கு தொடர்பில் தகவல்களை கோரினால் நாம் வழங்குவோம் என தெரிவித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page