இறக்குமதி தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு வாகன இறக்குமதியாளர் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இந்த இறக்குமதி தடை காரணமாக வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வர்த்தகத்துறையை சேர்ந்தவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக வாகன இறக்குமதியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது இலங்கையின் பொருளாதாரத்தில், எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று அந்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
வாகன இறக்குமதியாளர்களால் அந்த துறையில் கணக்காளர்கள் விற்பனை பிரதிநிதிகள், சந்தைப்படுத்தும் அதிகாரிகள், சாரதிகள், சுத்திகரிப்பாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் என்ற பல்வேறு தொழில் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
அதனை தவிர சேவைகள் பக்கத்தில் சுத்தப்படுத்துவோர் உட்பட்ட பல துறையினருக்கு தொழில் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் யாவரும் வாகன இறக்குமதியிலேயே தங்கியுள்ளதாக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது சில வாகன இறக்குமதியாளர்களின் கண்காட்சி அறைகளில் ஒரு வாகனம் கூட கையிருப்பில் இல்லை.
இது அந்த இறக்குமதியாளர்கள், தமது பணியாளர்களுக்கு வேதனங்களை வழங்குவதில் பாரிய சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தொடர்ந்தும் அரசாங்கத்தின் வாகன இறக்குமதி தடை தொடருமானால் சுமார் 1 லட்சம் அளவான நேரடி பணியாளர்கள் தொழில்களை இழக்கவேண்டியேற்படும்.
அத்துடன் அவர்களை நம்பியிருக்கும் 4 லட்சம் வரையிலான குடும்ப அங்கத்தவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாவர் என்றும் வாகன இறக்குமதியாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.