மாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..!

“பெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க கூடாது. விடுப்பட்ட தொழுகைகளை மீட்டி தொழ அவசியம் கிடையாது. ஆனால் அன்றை நாட்களில் விடுப்பட்ட நோன்புகளை சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது வேறு நாட்களில் அதை களாவாக பிடிக்க வேண்டும்.

இந்த மாதவிடாய் என்பது அல்லாஹ்வால் அனைத்து பெண்களுக்கும் இயற்கையிலே அமைத்துள்ளான். இந்த மாதவிடாயைப் பொருத்த வரை ஒவ்வொரு பெண்களுக்கும் நாட்கள் வித்தியாசப்படும். மாதவிடாய் வரும் காலங்களில் பெண்கள் பலவிதமான சிரமத்தை சந்திப்பார்கள். குறிப்பாக வயிற்று வலியைப் போன்று ஒரு விதமான வலியை சந்திப்பார்கள். அந்த வலியை தாங்கிக் கொண்டு தான் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்வார்கள். பிள்ளைகளை கவனிப்பது, ஆடைகளை கழுவுவது, சமையல் வேலைகளை செய்வது, இப்படி பல தொடர் வேலைகளை செய்வார்கள்.

இந்த காலங்களில் கணவன் தன் மனைவியுடன் அதிகமாக இரக்கமாக இருக்க வேண்டும். அப்படி தன் மனைவியுடன் இரக்கமாக இருக்கும் போது, அந்த இயற்கையான வலி மனைவிக்கு பெரிதாக விளங்காது. பொதுவாக கணவன் மனைவியுடன் இரக்கமாக இருக்கும் போது பல பிரச்சனைகள் பெரிதாக விளங்காது, மாறாக அதிகமான பிரச்சனைகள் சாதாரணமாவே அமைந்து விடும்.

கணவன் இரக்கமில்லாமல் தூரத்திலே இருக்கும் போது சின்னப் பிரச்சனைக் கூட பெரிதாக விளங்கும். எனவே தான் மாதவிடாய் என்ற அந்த வருத்தமான நாட்களில் வழமையை விட மனைவியுடன் நெருக்கமாகவும், இரக்கமாகவும் இருக்க வேண்டும்.
நபியவர்கள் பொதுவாக எல்லா மனைவிமார்களுடன் இரக்கமாகவே இருப்பார்கள். ஆனால் மாதவிட்டாய் காலத்தில் அதிகமாக இரக்கம் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.

அதற்கு இரண்டு காரணங்களை நாம் அவதானிக்கலாம்.ஒன்று யூதர்கள் பெண்களை இந்த நாட்களில் ஒதுக்கி வைப்பார்கள். இரண்டாவது பெண்களின் வலியை அன்பின் மூலமாக குறைப்பதாகும்.

அதே போல அந்த நாட்களில் வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் குறைத்து செய்வதற்கான வழிகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் நபியவர்கள் தன் மனைவியோடு எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து பாடம் படிக்கலாம்

‘ஒருவர் ‘தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?’ என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா ‘அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்’ என்றார்’ என ஹிஷாம் அறிவித்தார். (புகாரி 296)

மேலும் ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 297)

மேலும் ‘நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். ‘உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘ஆம்’ என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்’ என உம்முஸலமா(ரலி) அறிவித்தார்.( புகாரி 298)

மேலும் ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 300)

மேலும் ‘நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களுக்கு எதிரில் படுத்திருந்தேன். அப்போது நான் மாதவிடாயுடன் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ஸுஜுது செய்யும்போது, சில வேளை அவர்களின் ஆடை என் மீது படும். அவர்கள் ஒரு விரிப்பின் மீது தொழுதார்கள்’ என மைமூனா(ரலி) அறிவித்தார். (புகாரி 379)

இப்படியான பல ஹதீஸ்ளை காணலாம். இவைகள் அனைத்தும் மாதவிடாய் காலத்தில் கணவன்மார்கள் தத்தம் மனைவிமார்களுடன் இரக்கமாகவும் நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை நபியவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் நடை முறைப்படுத்தி காட்டியுள்ளார்கள், என்பதை விளங்கி நாமும் அவ்வாறு நடந்து கொள்வோமாக !

Check Also

நியூசிலாந்தின் மவ்ரி முஸ்லிம்கள் (அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையையே நான் அதிகம் உச்சரிக்கின்றேன்)

உலகின் தலைச்சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரும், நியூசிலாந்த்தின் வரலாற்றிலிலேயே அதிக வருமானம் பெறும் ரக்பி வீரருமான சோனி பில் வில்லியம்ஸ், …

You cannot copy content of this page