கொரோனா காலத்தில் மரணிக்க அச்சப்படும் முஸ்லிம்கள்

கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை அடக்கம் செய்வது அல்லது தகனம் செய்வது தொடர்பான கேள்விக்கு, அரசாங்கத் தலைவர்கள் வழங்கும் மாறுபாடான தகவல்கள் காரணமாகவும் ஒருவருக்கொருவர் முரண்படுவதன் மூலமும் அரசாங்கம் சங்கடத்துக்குள்ளாகியுள்ளதோடு குறித்த விடயம் வினோதமான திருப்பத்தை அடைந்துமுள்ளது.கொவிட் – 19 காரணமாக மரணித்த முஸ்லிம்களை அடக்கம் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாகவும், அடக்கம் செய்யவதற்கு ஏற்ற ‘வரண்ட நிலத்தை’ அடையாளம் காணுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் திடீரென அறிவிக்கப்பட்டது. இந்த விடயம் உடனடியாக சுகாதார அதிகாரிகளால் மறுக்கப்பட்டது. அதன்பின்னர், நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கும் விதத்தில் ‘தொலைதூர பகுதியில்’  வரண்ட நிலத்தில் மட்டுமே அடக்கம் செய்தல் அனுமதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது. தற்போது சுகாதார அதிகாரிகளே இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமளிதுமளியில் இனவாத கருத்துக்களை வெளிப்படுத்தும் பொது பல சேனா அமைப்பின்  செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ‘வஹாபி குழுக்கள்‘ தகனம் செய்வதை விட அடக்கம் செய்வதையே ஊக்குவிப்பதாகத் தெரிவித்ததோடு சமயச் செல்வாக்கிற்கு உட்படாது, சுகாதாரத் துறையின் கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கையில் காலனித்துவ கால கட்டளைச் சட்டத்தினை அதிகாரிகள் பின்பற்ற முனைகின்றனர். இது கொள்ளை நோய் மற்றும் தொற்று நோய்களால் மரணித்தவர்களை குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இறந்தவுடன் விரைவாக அகற்றப்பட வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்துகின்றது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டம் அத்தகைய அகற்றல் முறைகளாக அடக்கம் அல்லது தகனம் செய்ய அனுமதிக்கிறது.

அடக்கம் அல்லது தகனம் தொடர்பாக ஒழுங்குமுறைகளைச் செய்ய அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இறந்த உடல்களை அகற்றுவது தொடர்பில் அடக்கம் அல்லது தகனம் செய்வதற்காக அக் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் விசேட நடைமுறைகளை கடைப்பிடிக்க முடியும் என  விதிமுறைகள் வெளிப்படுத்துகின்றன. எவ்வாறெனினும், கடந்த ஏப்ரல் 11 ஆந் திகதி வெளியிடப்படட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தம்,  கொவிட் – 19 காரணமாக உயிரிழப்பவர்கள்  மற்றும் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்கள் ‘தகனம் செய்யப்படுதல் வேண்டும்’ என அறிவித்தது.

தமது சமய நம்பிக்கையின் பிரகாரம் அவர்களது உடல்கள் தகனம் செய்யப்படக் கூடாது என முஸ்லிம்கள் நம்புகின்றனர். இது தவிர, உலகம் முழுவதிலும் அடக்கம் செய்தல் என்பது பல்வேறு மக்களிடையே கலாசாரமாகவும் பாரம்பரியமாகவும் காணப்படுகின்றது. உலகிலுள்ள 180 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இது அனுமதிக்கப்பட்டுள்ளதோடு நடைமுறையிலும் காணப்படுகின்றது.

இது வரை 5.5 மில்லியன் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 1.27 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கையினைப் பொறுத்த வரை 2020 நவம்பர் 11 ஆந் திகதியன்று மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,759. உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 45 ஆகும்.

கொவிட் – 19 தொற்று காரணமாக உயிரிழப்போரை கையாளும் விதம் தொடர்பில் வழிகாட்டல்களை கடந்த 2020 மார்ச் மாதம் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. உலக சுகாதார நிறுவனத்தின்  வழிகாட்டல்களில் அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ் வழிகாட்டுதல்களுக்குள், இறுதிச் சடங்கின்போது உறவினர்கள் உடலைப் பார்க்க முடியும், ஆனால் தொடக் கூடாது. இறந்தவரினதும், குடும்ப உறுப்பினர்களினதும் கலாசார மற்றும் சமூகப் பாரம்பரியங்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  உடல்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படக் கூடாது, ஆனால் அடக்கம் செய்வதற்கு அல்லது தகனம் செய்வதற்கு முன்னதாக தமது அன்புக்குரியவர்களால் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை புறக்கணித்து, தன்னிச்சையான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கை அதன் தனித்துவமான வழியில் பயணிக்கிறது. கொவிட் -19 தொற்றினால் உயிரிழந்த அல்லது உயிரிழந்ததாக சந்தேகிக்கப்பட்ட எவரையும் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அடக்கம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்படுவது முஸ்லிம் சமூகத்தை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்த அனுமதி மறுத்தல் தீர்மானத்திற்கு எவ்வித விஞ்ஞானபூர்வமான காரணங்களும் கிடையாது.  தகனம் என்பது தற்போது முஸ்லிம்களின் மனதில் மிகப் பெரும் அச்சமாக மாறியுள்ளது.

பல முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக வீடுகளிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்த ஜனாஸாக்களில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் அவை தகனம் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலர் ஏப்ரல், ஜூன் மாதங்களில் தகனம் செய்வதற்கு எதிராக அடிப்படை உரிமை வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். தொற்றுநோய் பரவல் காரணமாக நீதிமன்றங்கள் தொடராக மூடப்பட்டதால் இந்த வழக்குகள் இதுவரை விசாரிக்கப்படவில்லை.

மார்ச் 30, 2020 வரை, சுகாதார அமைச்சின் இணையதளத்தில் கொவிட் – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது ஒரு பாதுகாப்பான தெரிவாக பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் மார்ச் மாதம் 29 ஆந் திகதியன்று முதலாவது முஸ்லிம் நபரின் மரணம் இடம்பெற்றபோது, இறந்தவரின் ஜனாஸாவைப் பார்ப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்படாமல் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது. அதுவரை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல் இரவோடு இரவாக அவ்வமைச்சினால் நீக்கப்பட்டது, அதிலிருந்து இன்றுவரை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நவம்பர் 10 ஆம் திகதி வரையான நிலவரத்தின் பிரகாரம் தகனம் செய்யப்பட்ட கொவிட் – 19 ஜனாஸாக்களின் எண்ணிக்கை 21 ஆக காணப்படுகின்றது (இரண்டு உயிரிழப்புக்கள் தேசிய கொவிட் உயிரிழப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை) ஒரு ஜனாஸா தகனம் செய்யப்பட்ட பின்னர், மரணித்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோனை முடிவு வெளியிடப்பட்டது.

நாட்டின் மக்கள் தொகையில் ஒன்பது சதவீதம் முஸ்லிம்களாக இருந்த போதிலும், கொவிட் -19 தொற்றினால் இறந்தவர்களுள் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாவர். குடும்ப உறவினர்களின் தகவல்களின் பிரகாரம், தகனம் செய்யப்பட்ட 21 ஜனாஸாக்களில் 14 பேர்  பெரும்பாலும் வீடுகளில் சாதாரண வியாதிகளால் உயிரிழந்தவர்களாவர். ஆனால் அவர்களின் ஜனாஸாக்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சுகாதார அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கொண்டு செல்லப்பட்டன. வைத்தியசாலை அதிகாரிகளின் கூற்றில், மரணித்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும்.. பாகம் 2 இணை படிக்க…

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page