கொரோனா வைரஸ் (Covid 19) பரவுவதைத் தடுக்க குனூத் அன்னாஸிலாவை சுருக்கமாக ஓதுமாறு கோரிக்கை -ACJU

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ

கொரோனா வைரஸ் (Covid- 19) பரவுவதைத் தடுக்க குனூத் அன்னாஸிலாவை ஐவேளைத் தொழுகைகளிலும் ஒரு மாத காலத்திற்கு சுருக்கமாக ஓதி வருவோம்

உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் (Covid- 19) பரவி அதன் மூலம் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்கள். எமது நாட்டிலும் அந்தத் தாக்கம் காணப்படுகின்றது. அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். 

அல்லாஹூ தஆலா அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்றான். இச்சோதனைகள் நீங்குவதற்காக தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார், மற்றும் ஸதகா போன்ற நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்ப வேண்டும்.

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனைகளின் போது தொழுகையில் குனூத் அன்னாஸிலாவை ஓதியுள்ள விடயம் பல ஸஹீஹான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து பாரிய நோய்கள் பரவும் போது குனூத் அன்னாஸிலா ஓதுவது சுன்னதாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, இலங்கையில் கொரோனா வைரஸ் (Covid- 19) தாக்கத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதற்காக அடுத்து ஒரு மாத காலத்திற்கு ஐவேளைத் தொழுகைகளிலும் குனூத் அன்னாஸிலாவை ஓதுவதற்கு மஸ்ஜித்களில் ஏற்பாடு செய்யுமாறும் மற்றும் வீடுகளில் தொழுபவர்களும் அதனை ஓதிவருமாறும் கேட்டுக் கொள்வதோடு, மஸ்ஜிதுடைய இமாம்கள் குனூத் அன்னாஸிலாவை ஓதும் போது வழமையாக பஜ்ருடைய தொழுகைகளில் ஓதப்படும் குனூத்துடைய துஆவுடன் பின்வரும் துஆக்களை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ. (سنن أبي داود)

اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ. (صحيح البخاري)

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ. (صحيح مسلم)

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர், பத்வாக் குழு – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU/FRL/2020/19-236 – 2020.10.26

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page