தமிழ், சிங்கள மக்களிடமிருந்து முஸ்லிம்களை பிரிப்பதில் இரு தேசிய கட்சிகளின் தந்திரோபாயமும்,ரணிலின் ஒப்புதலும்.

தமிழ், சிங்கள மக்களிடமிருந்து முஸ்லிம்களை பிரிப்பதில் இரு தேசிய கட்சிகளின் தந்திரோபாயமும், ரணிலின் ஒப்புதலும்.    

அரசியலில் இரகசியம் என்பது இல்லை. ஆரம்பத்தில் இரகசியம் என்று காண்பிக்கப்பட்டாலும், அது என்றோ ஒருநாள் ஏதோவொருவகையில் வெளிவந்துவிடும்.

அந்தவகையில் வடகிழக்கில் தமிழர்களுடன் ஐக்கியமாக வாழ்ந்துவந்த முஸ்லிம் மக்களை நாங்கள்தான் பிரிக்கும் தந்திரோபாயத்தை மேற்கொண்டோம் என்றும், அதற்காக முஸ்லிம்களை தனி தேசிய இனமாக அங்கீகரிக்கும் தேவை அப்போது ஏற்பட்டதென்றும், மு.கா தலைவர் அஸ்ரபின் எழுட்சி எங்களுக்கு சாதகமாக அமைந்தது என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

2019 இல் நடைபெற்ற உயிர்த்த ஜாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கும்போதே ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த தகவலை வெளியிட்டார்.  

தமிழ் – முஸ்லிம் உறவுகளில் ஏற்பட்ட விரிசல் தொடர்பாக வரலாற்று சம்பவத்தின் அடிப்படையில் பல கட்டுரைகளை கடந்த காலங்களில் வெளியிட்டிருந்தேன். இப்போது அதற்கான உத்தியோகபூர்வ ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

முஸ்லிம் மக்கள் வரலாற்றுரீதியாக வடகிழக்கில் தமிழ் மக்களுடனும், வடகிழக்குக்கு வெளியே சிங்கள மக்களுடனும் இரண்டற கலந்தவர்களாக வாழ்ந்து வந்தார்கள்.

1975 க்கு பின்பு வடகிழக்கில் படிப்படியாக தமிழர்களின் ஆயுத போராட்டம் வளர்சியடைந்தபோது அதில் முஸ்லிம்களும் தங்களை இணைத்துக்கொண்டு ஆதரவு வழங்கினார்கள்.

இவ்வாறு முஸ்லிம்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நிலை தொடர்ந்தால், தமிழர்கள் தங்களது இலக்கை அடைந்துவிடுவார்கள் என்று அன்றைய அரசாங்கம் விழித்துக்கொண்டது. அத்துடன் பல சம்பவங்களும் நடந்தேறியது.    

1985 இல் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் – முஸ்லிம் உறவுகளில் படிப்படியாக விரிசல்கள் ஆரம்பமானது. பின்பு அது 1990 இல் வடக்கில் இருந்த ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் புலிகளால் வெளியேற்றபட்டனர்.

அத்துடன் கிழக்கில் பல பிரதேசங்களில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட துன்பியல் சம்பவங்களும் நடந்தேறியது.

காலாதிகாலமாக ஒற்றுமையாக வாழ்ந்துவந்த முஸ்லிம்கள், ஏதோவொரு காரணமில்லாமல் திடீரென வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்படவுமில்லை, கிழக்கில் கொலை செய்யப்படவுமில்லை.

தமிழர்களிடமிருந்து முஸ்லிம் மக்களை பிரிப்பதில் அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் இயந்திரம் பல சூழ்சிகள் செய்ததென்று ரணில் சாட்சியம் வழங்கியுள்ளார்.  

அவ்வாறென்றால், வடகிழக்குக்கு வெளியே சிங்கள மக்களிடமிருந்து முஸ்லிம்களை பிரித்தது யார் ?

வடகிழக்கில் உள்ள முஸ்லிம்களை தமிழர்களுடன் எவ்வாறு பகைமை உணர்வுகளை ஐக்கிய தேசிய கட்சியினர் ஏற்படுத்தினார்களோ, அதுபோலவே வடகிழக்குக்கு வெளியே சிங்கள மக்களுடன் விரிசல்களை ஏற்படுத்தும் தந்திரோபாயத்தினை “சுதந்திர கட்சி” சார்ந்த தரப்பினர் ஏற்படுத்தினார்கள்.

தமிழர்கள் பலமாக இருக்கும் வரைக்கும் முஸ்லிம்களை அரவணைத்து சென்ற சிங்கள தரப்பினர், தமிழர் தரப்பு 2009 இல் முள்ளியவாய்க்காலில் தோல்வியடைந்ததன் பின்பு முஸ்லிம்களை கைவிட்டதுடன், தங்களது அரசியல் ஆதாயத்துக்காக சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காண்பிக்கும் முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே இரு பெரும் தேசிய கட்சிகளும் தங்களது சுயநல அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களை பந்தாடிவருகின்றார்கள் என்பது ரணிலின் வாக்குமூலம் உறுதிப்படுத்துகிறது.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page