மாட்டு இறைச்சி விவகாரம், பற்றி எரியத் தேவை இல்லை

மாட்டு  இறைச்சி முஸ்லிம்களது தேசிய உணவு என்ற கருத்து எல்லாருடைய எண்ணத்திலும் இருக்கின்றது. ஆனால் அது உண்மைக்கு புறம்பானது. மனோ கணேஷன் ஐயா அவரகள் கூறியதுபோல் இது “இலங்கை மக்களின் தேசிய உணவு” ஆகும். முஸ்லிம்களும் மாட்டிறைச்சியினை மற்றவரகளைப்போல் உண்ணுகின்றார்கள். அவ்வளவுதான்.

விகிதாசாரத்திலும் அல்லது எண்ணிக்கையிலும் மாட்டு இறைச்சியினை உண்ணுவதில் முஸ்லிம் இனத்தவரகள் எந்தக் காலத்திலும் ஏனைய இனத்தவரகளுடன் போட்டியிடவில்லை. அவ்வாறு போட்டியிட்டாலும் நிச்சயமாக முஸ்லிம்கள் படுதோல்வியையே தழுவுவார்கள் என்பது நிச்சயம். முஸ்லிம்கள் “ஹலால்” முறையிலான இறைச்சியினை மட்டுமே உண்பார்கள் என்பதனால் “மாட்டினை அறுத்தல்” மற்றும் அதன் இறைச்சியினை விற்பனை செய்தல் ஆகியவை மாத்திரமே முஸ்லிம்களிடத்தில் இருப்பதனால் ஏதோ இலங்கையின் ஏகபோக மாட்டிறைச்சி உரிமையாளர்கள் முஸ்லிம்கள்தான் என்ற மனோநிலை எல்லார் மனதிலும் இருக்கின்றது.

இலங்கையின் மாட்டு இறைச்சி வர்த்தகத்தின் முன்னோடிகள் முதலில் சிங்கள சகோதரர்களும் அடுத்து தமிழ்ச் சகோதரர்களும் அதன்பின்னர்தான் ஏதோ முஸ்லிம்களும் 5 – 7% மானோர் அங்கும் இங்கும் இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் மாட்டு இறைச்சியினை உட்கொள்வோரில் யார் முதலிடம் வகிக்கின்றனர் என்ற கருத்துக்கணிப்பு அண்மையில் அதிகாரபூர்வமற்ற முறையில் நடாத்தப்பட்டது. அதில் மிகவும் பினதங்கியவரகளாகவே முஸ்லிம் சமூகம் காணப்பட்டது. அப்படி ஒரு போட்டி வந்து அதில் இவரகள் போட்டியிட்டாலும்கூட முதலிடம் அல்லது இரண்டாம் இடம் என்பது முஸ்லிம்களுக்கு எட்டாக் கனிதான். 

இலங்கையில் மாநகர சபைகள் 24,  நகர சபைகள் 41, பிரதேச சபைகள் 276 எனற அடிப்படையில் 342 உள்ளுராட்சி சபைகள் இருக்கின்றன. இவற்றுள் கிழக்கில் 45 சபைகளும் வடக்கில் 34 சபைகளுமாக மொத்தம் 79 சபைகள் இருக்கின்றன. வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் 263 சபைகளும் மிகவும் பெரும்பாலும் சிங்கள பெரும்பான்மை மக்களை மையப்படுத்தியே அமைந்து காணப்படுகின்றன. அந்த சபைகளின் மிக முக்கிய வருமானம் மாட்டு இறைச்சிக்கடை மூலம் பெறப்படும் ஒன்றாகவே காணப்படுகின்றமையை நோக்கலாம்.

கிழக்கில் சராசரியாக ஒரு கிலோ மாட்டு இறைச்சி ரூபா 600 அளவில் விற்கப்படும்போது ஏனைய பிரதேசங்களில் அண்ணளவாக ரூபா 1500க்கு விற்பனை செய்யப்படுவதன்மூலம் இதன் உண்மையை நன்கு அறியலாம். அந்தப் பிரதேசங்களில் கேள்வி மிக அதிகமாக இருப்பதனால் நிரம்பலை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

என்ன காரணத்திற்காக மாடு அறுப்பு தடை செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று இதுவரை அரசு மக்களுக்கு அறிவிக்கவில்லை. அரசியல்வாதிகளோ மதகுருமார்களோ பொது மக்களோ அல்லது புத்திஜீவிகளோ இது சம்பந்தமாக குறிப்பிடத்தக்க ஆரவாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மக்கள் மத்தியில் ஒருவித சலசலப்பு அதிகரித்து வருகின்றது. பொறுப்பான அரசு எனில் என்ன காரணத்திற்காக உணவிற்காக மாடு அறுக்கப்படுவதனை தடை செய்யப்படுகின்றது என்பதனை முதலில் மக்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். அரசியல்வாதிகளும் மக்களும் எழுந்தமானத்திலேயே என்ன காரணமாக இருக்கலாம் என்று ஊகித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இலங்கை புனித  பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தால் மிருகங்கள் தீவின் எந்த இடத்திலும் அறுக்கப்படக்கூடாது என்பதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவ்வாறும் இல்லை.

இலங்கையில் புனித பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டிய பல இடங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. உதாரணமாக அனுராதபுரம்,  பொலநறுவை,  மின்னேரி மற்றும் திருகோணமலை, நல்லூர், திருக்கேதீஸ்வரம், கீரிமலை, கதிர்காமம் என்பனவற்றைக் குறிப்பிடுகினறார்கள். அந்தப் பகுதிகளில் 100% ஆன ஒரே மதத்தவர் அங்கு வாழ்கின்றார்கள் என்றால் அப்பகுதிகளில் மிருகங்களை  கொல்லக்கூடாது என்பது அவரகளது மதச் சம்பிரதாயமாக இருப்பின் அவ்வாறு செய்தல் கூடாதுதான். அது நிச்சயமாக தடுக்கப்பட வேண்டியதுதான்.

ஆனால் முழு இலங்கையையும் புனித பூமியாக்கி அங்கு “மிருகவதை” கூடாது என்று கூறினால் அது எந்தளவுக்குப் பொருந்தும். இலங்கை  பல்லின மக்கள் வாழும் நாடு. இலங்கையின் அரசமைப்பு ஒவ்வொரு இனத்தவரும் தமது மதஉரிமைகளைப் பேண எந்தத் தடையும் இல்லை என்று கூறுகின்றது. புதிதாக ஒரு யாப்பு உருவாக்கப்படும்போது முழு உரிமையையும் ஒரு மதத்திற்கே கொடுத்தல் எப்படி முடியும். தீவு முழுவதையும் புனித பிரதேசமாக மாற்றுதல் என்பது பொருந்தாத விடயம். அது முடியுமான விடயமா? மிகவும் பிரபல்யம் வாய்ந்த அரசியல் சட்ட நிபுணர்கள் மலிந்துள்ள எமது பாராளுமன்றம் இதற்கு ஒப்புதல் வழங்குமா?

உலகில் ஐந்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மை பௌத்த நாடுகள் (கம்போடியா 96%, தாய்லாந்து 93%,  மியன்மார் 80%, லாவோஸ் 66%, மங்கோலியா 55%) இருக்கின்றன. இலங்கையை விட நிலப் பரப்பிலும் சனத்தொகையிலும் அவை பெரியவை. ஆயினும் அங்கு எந்த நாடும் அல்லது எந்தப் பகுதியும் புனித பூமிகளாகப் பிரகடனப்படுத்தப்படவும் இல்லை. மிருகங்கள் இறைச்சிக்காக அறுப்பது தடை செய்யப்படவும் இல்லை. பௌத்த மக்கள் கிட்டத்தட்ட அதிகமானளவில் வாழக்கூடிய சீனா 18%,  ஹொங்கொங் 13%, ஜப்பான் 36%, தென் கொரியா 22%, சிங்கப்பூர் 33% ஆகிய நாடுகளில்  மிகப் பிரதானமான உணவாகக் காணப்படுவது மாட்டிறைச்சியாகும். அங்கு வாழும் பௌத்த மக்கள் அங்கு வாழும் பிற சமூகங்களுடன் மிக மிக ஒற்றுமையாக வாழ்கின்றமையை அவரகள் உலகிறகு உரத்துச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.

மாத்திரமன்றி தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற இலங்கையர்களுடன் சிறப்பாக பௌத்த மற்றும் இந்து மக்களுடன் அங்கு வாழும் சுதேசிய அரேபிய முஸ்லிம் மக்கள் மிகுந்த புரிந்துணர்வுடன் வாழ்கின்றமையையும்  அனுமதிக்கபட்ட உணவு வகைகளையும்  பானங்களையும் உண்பதற்கும் பருகுவதற்கும் மற்றும் தமது வேலை கொள்வோரின் அனுமதியுடன் பிற நகரங்களுக்கு சுதந்திரமாகச் சென்று வருவதனையும் இங்கு குறிப்பிடலாம். தவிர உலகின் ஏனைய பாகங்களில் வாழக்கூடிய இலங்கையர்கள் எந்தவித அழுத்தங்களும் இல்லாது மகிழ்ச்சியாக வாழ்வதனையும் காண்கின்றோம்.

மாடறுப்பினைத் தடை செய்வதனால் எந்த வகையிலும் இலங்கை முஸ்லிம்களுக்கு பாதகம் ஏற்படமாட்டாது என்பதனாற்றான் முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் மத குருமார்களும் இதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் “சும்மா” இருக்கின்றார்கள். ஏன் அலட்ட வேண்டும்.

இலங்கை அரசு இலங்கை முஸ்லிம்கள் எந்த உணவையும் சாப்பிடக்கூடாது அதற்கு எல்லாம் இங்கு அனுமதி இல்லை என்ற சட்டத்தைக் கொண்டு வந்தால் பரவாயில்லை. ஒன்றும் இல்லாததற்கு குரல் எழுப்ப வேண்டிய அவசியமோ அல்லது போராட வேண்டிய தேவையோ முஸ்லிம்களுக்கு இல்லை. இலங்கை பல வளங்களையும் உடைய நாடு. பல்வேறு உணவுப் பொருள்களும் இங்கு இருக்கின்றன. பல்வேறுவிதமான மரக்கறிவகைகள், பழ வகைகள், மீன்கள், கருவாடு, தேன், நெய், கொக்கா கோலா, பெப்சி கோலா, பேரீத்தம் பழம், பசும் பால், தயிர் வகைகள், கோழி இறைச்சி, ஆடு, மான், மரை, உடும்பு போதாததற்கு பல்வேறு வகையான சத்துள்ள கீரை வகைகளும் இளநீர் வகைகளும் சில வேளைகளில் “சும்மா” வும் கிடைக்கின்றன. இவை எல்லாம் உயிரோடு இருப்பதற்கும் உயிரோடு வாழ்வதற்கும் போதாதா?

கொரணா தாக்கத்தினால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதனையே  தாங்கிக்கொண்ட சமூகம்தான் முஸ்லிம் சமூகம். கேவலம். இந்த இறைச்சிக்காகவா அடித்துக் கொண்டு மாளவா போகின்றோம்.

இறுதியாக மாட்டிறைச்சியினை தடை செய்வதுபற்றி மகாத்மா காந்தியினுடைய மிக இறுதிக்காலத்தில் பிரச்சினை ஒன்று வெடித்தபோது அவர் கூறியது எமது அரசியல்வாதிகளுக்கு ஒரு சிறு விளக்கமாக இருக்கட்டும் என்பதற்காக கீழ்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

What Mahatma Gandhi Said to Those Who Wanted Beef Banned in India.

“How can I force anyone not to slaughter cows unless he is himself so disposed? It is not as if there were only Hindus in the Indian Union. There are Muslims, Parsis, Christians and other religious groups here.” (The Wire) All are good for the best

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page