Privelth குளோபல் பொத்துவில் முகாமையாளருக்கு விளக்கமறியல், பணிப்பாளர்களுக்கு பிடியாணை!

பிரிவேல்த் குளோபல் பொத்துவில் முகாமையாளருக்கு விளக்கமறியல், பணிப்பாளர்களுக்கு பிடியாணை.

பிரிவேல்த் குளோபல் எனும் தனியார் நிறுவனத்தின் பொத்துவில் கிளையின் முகாமையாளராக செயற்பட்ட ஏ.ஏ.எஸ். சுக்குரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நேற்று (06) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களான சிஹாப் சரீம் மற்றும் பாத்திமா பர்சானா மார்கார் ஆகியோருக்கு எதிரான பிடியாணை உத்தரவினையும் பொத்துவில் நீதவான் எம்.எச். முஹம்மத் ராபீ பிறப்பித்தார்.

காசோலை மோசடி மற்றும் மத்திய வங்கியில் நிதி நிறுவனமாக பதிவுசெய்யாது பொதுமக்களின் பணத்தினை வசூலித்து பண மோசடி செய்தமை ஆகியன தொடர்பில் 12 முறைப்பாடுகள் அம்பாறை பெருங் குற்றத் தடுப்பு பிரிவில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இது தொடர்பான விசாரணைகளை அம்பாறை பெருங் குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில், குறித்த தனியார் நிறுவனத்தின் பொத்துவில் கிளையின் முகாமையாளராக செயற்பட்ட சுக்குர் நேற்று (05) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு இன்று பொத்துவில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போதே, இவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் எம்.எச். முஹம்மத் ராபீ உத்தரவிட்டார். அத்துடன் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களான சிஹாப் சரீம் மற்றும் பாத்திமா பர்சானா மார்கார் ஆகியோருக்கு எதிராக பிடியாணை உத்தரவினையும் அவர் மேற்கொண்டார்.

இந்த வழக்கில் முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ஏ.பீ.எம்.மாஹீர் மற்றும் ஏ.எம்.சாதீர் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page