இஸ்லாம் பாட விவகாரம் ஒரு வருடத்திற்கு முன்பே ஜமீயத்துல் உலமாவுக்கு அறிவிக்கபட்டும் பிரச்சினை வெடிக்கும் வரை மெளனம் காப்பது ஏன்?

தற்போது நடைமுறையில் உள்ள பாடசாலை மாணவர்களின் இஸ்லாம் படப்புத்தகம் சம்பந்தமாக சர்ச்சைகள் தோன்றியுள்ளது . இது சம்மந்தமாக பொறுப்புக்கூற வேண்டிய தரப்புகள் இன்னும் மௌனம் காப்பதாக உயர்நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார்.

மாணவர்களின் இஸ்லாம் பாடப்புத்தகங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்திய பாராளுமன்ற தெரிவுக்குழு, தற்போது நடைமுறையிலுள்ள தரம் 5 முதல் 11 ஆம் தாரங்களின் வரையிலான இஸ்லாம் பாடப்புத்தகங்களில் திருத்தங்கள் உள்ளதாகவும் இவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனற பாராளுமன்ற தெரிவுக்குழு கல்வி அமைச்சிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் புத்தகங்களை மீளப் பெறுவதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக கல்வி அமைச்சில் உள்ள முஸ்லிம் உயரதிகாரிகள் ஜமியத்துல் உலமாவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

மேலும் இஸ்லாம் ஆசிரிய, ஆசிரியைகளுக்கான வழிகாட்டி கை நூல்களை (Teacher’s guideline) ஆய்வு செய்த முக்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் ஆலேசனை அதிகாரியான ரோஹான் குணரத்தன அவர்களின் தலைமையில் இலங்கை பாதுகாப்பு பிரிவின் ஒரு குழு இவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர் கை நூல்களை தயாரிக்கும் இலங்கை தேசிய நிறுவனத்திற்கு (N I E) National Institute of Education தெரிவித்துள்ளது .

இது சம்பந்தமாக ஆராய்ந்த தேசிய கல்வி நிறுவனத்தின் முஸ்லிம் அதிகாரிகள் இவை பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட இவ்விடயம் தொடர்பாக, ஜமீயஅத்துல் உலமா இன்னும் மௌனம் சாதித்து வருவதாகவும், இது சம்பந்தமாக தேசிய கல்வி நிறுவனத்திற்கு தேவையான ஆலோசனைகளையோ அறிவுரைகளையோ, விளக்கங்களையோ வழங்கவில்லை எனவும் அதிகாரி கவலை தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக கூடிய சீக்கிரத்தில் இவர்களின் திருத்த ஆலோசனைகளுக்கான பதிலையும், விளக்கங்களையும் ஜமியத்துல் உலமா வழங்க தாமதிக்குமாயின் முஸ்லிம் மாணவர்களின் இஸ்லாம் பாடம் சம்பந்தமாக சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே முஸ்லிம் மாணவர்களின் இஸ்லாம் பாடம் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சர்சைகளை நிவர்த்தி செய்ய, ஆய்வாளர்களின் சந்தேகங்களுக்கு உரிய பதில்களை வழங்கியும், உண்மையில் அவற்றில் திருத்தங்கள் இருந்தால், அதை மேற்கொள்ள வேண்டுமாயின் அவ்வாறான திருத்தங்களை மேற்கொள்ள பொறுப்பானவர்கள் இதுவரையில் உடனடிக் கவனம் செலுத்தாமல் இருப்பதும், அவ்வாறான ஒரு திருத்த வேண்டிய நிலைமை அதில் காணப்படவில்லையாயின் அதற்கான பதிலையும் விளக்கத்தையும் வழங்க தாமதிப்பது
ஏன் ?

பொறுப்புக் கூற வேண்டிய உரிய தரப்புக்கள் தொடர்ந்து மெளனம் சாதித்து, அதிகாரிகளால் ஒருதலைப்பட்சமான முடிவுகள் எட்டப்படுமாயின் அதன் பிரதிபலனை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

ஏதோ ஒரு காலத்தில் திருத்தப்பட வேண்டிய காதி நீதிமன்ற சட்டத்தை திருத்தாமல் மூன்றாம் நபருக்கு மூக்கை நுழையவைத்து அதனை உரிய காலப்பகுதியில் திருத்தாமல் தாமதித்தின் பிரதிபலனை இன்று நாம் அனுபவிக்கின்றோம்.

தலைமை பொறுப்புக்களில் இருந்து கொண்டு கடமைகளை நிறைவேற்றாமல், விதைகள் விளைவுகளான பின் மேடை கட்டி கோலமிட்டு மன்னிப்பு கேட்பதால், கண்ணீர் வடிப்பதால் சமூகத்திற்கு ஏற்படும் அழிவையும், அவமானத்தையும், இழப்பையும் ஈடு செய்ய முடியாது.

எனவே இது சம்பந்தமாக எமது முஸ்லிம் அரசியல் தரப்பும், ஆன்மீக தரப்பும், அறிவுத் தரப்பும்
உடனடிக் கவனம் செலுத்துவார்களா? (பேருவளை ஹில்மி)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page