சஹ்ரான் சம்பந்தமாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன், ஷிப்லி பாரூக் வழங்கிய சாட்சியம்

2015 பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தேசிய தௌஹீட் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் சமர்ப்பித்த கொள்கை அறிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணக்கம் வெளியிட்டது.

இந்த தகவலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண உறுப்பினர் ஷிப்லி ஃபாரூக் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியம் வழங்கும் போது தெரிவித்தார்.

2015 பொதுத் தேர்தலுக்கு முன்னர் சஹ்ரான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான கொள்கைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணக்கம் வெளியிட்டதாக அவர் கூறினார்.

முன்னதாக, அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வாலியுல்லா அறக்கட்டளையின் செயலாளர் முகமது ஸெய்லான், 2015 பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஐந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சஹ்ரான் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

இந்தக்கட்சிகள் சார்பில் உடன்படிக்கையில் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, ஷிப்லி ஃபாரூக், ஏ.எல்.எம். ரூபி, மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் ஆகியோர் கையெழுத்திட்டதாக அவர் குறிப்பிட்டார்

இந்நிலையில் 2015 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து காத்தான்குடி மருத்துவமனையில் சஹ்ரானின் சகோதரர் ரில்வானை சந்தித்தமை குறித்து ஷிப்லி ஃபாரூக்கை ஆணைக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தக்கேள்விக்கு பதிலளித்த சாட்சி, 2015,ஆகஸ்ட் 21 ஆம் திகதி அன்று ஏற்பட்ட மோதலின் போது நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ரில்வான் ஒருவர் என்றும் கூறினார்.

ஆகஸ்ட் 22, 2015 அன்று, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் தாமும்; காயமடைந்த நான்கு பேரை சென்று பார்வையிட்டதுடன், தாக்குதலில் சேதமடைந்த காத்தான்குடியில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத்தின் பள்ளிவாசல் மற்றும் விருந்தகம் என்பவற்றையும் பார்வையிட்டதாக குறிப்பிட்டார்.

இதன் சாட்சி வழங்கலின்போது சஹ்ரானின் அமைப்பின் பள்ளிவாசலுக்கு முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்றபோது அங்கு சஹ்ரான் ஹாஷிமை சந்தித்தமை மற்றும் அவருடன்; கலந்துரையாடிய காணொளி சாட்சிக்கு காண்பிக்கப்பட்டது.

அத்துடன் சஹ்ரானின் தேசிய தௌஹீத் ஜமாத் பள்ளிவாசலுக்கு அதற்கு முன்னர் ஏன் சென்றீர்கள் என்று ஆணைக்குழுவினர் சாட்சியிடம் கேள்வி எழுப்பினார். எனினும் சாட்சிக்கு அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை.

எனினும் பயங்கரவாத தாக்குதல்களை ஒருங்கிணைப்பதற்கு முன்னர் சஹ்ரானின் அணியின் முக்கிய உறுப்பினரான ஆர்மி மொஹிதீன் தனக்குக் கீழ் பணியாற்றி வந்ததாகவும் ஷிப்லி ஃபாரூக் சாட்சியமளித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page