“முஸ்லிம் சமூகத்தின உணர்வுகளை தூண்டுவதும், ஒருவகையான இனவாதமே ஆகும்”

Corona  வின் பெயரால் ஒரு சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டதை நியாயப் படுத்திய தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்சவின் உரையில் இருந்த உண்மையற்ற தன்மையை சரியான ஆதாரங்களோடு தெளிவு படுத்த எமது பிரதிநிதிகளும் தலைமைகளும் தவறிவிட்டார்கள். 

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் கூறிய Covid-19 இனால் இறந்தவர்களை “புதைப்பதா எரிப்பதா என்பதற்கு அப்பால் கொறோனா இந்த நாட்டில் கட்டுப் படுத்தப் பட்டிருப்பதையொட்டி அனைத்து இன மக்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த நாட்டின் அதி மேதகு ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் மருத்துவர்களின் சிறந்த அற்பணிப்பும், முப்படையினரின் சிறந்த செயல்திறனும் மக்களின் ஒத்துழைப்பும் Covid-19 ஐ சமூக அளவில் பரவாமல் தடுத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக் காரணமாக அமைந்தது. ஆனால் அமைச்சரின் கருத்தின் பிரகாரம் அடக்கம் செய்யாமல் அனைத்து உடல்களையும் எரித்ததால் தான் இந்த கொறோனாவை கட்டுப்படுத்திய தாகவும் அதன் மூலம் அனைத்து இன மக்களும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் பொருள் படுகின்றது. அவ்வாறாயின் Covid-19ஐ கட்டுப் படுத்தியதில் மிகவும் வெற்றி அடைந்த நாடுகளான நியூசிலாந்து, தாய்வான். தாய்லாந்து, பூட்டான், புறூணை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அடக்கம் செய்ய அனுமதித்ததை என்னவென்று சொல்வது.

Covid-19 ஆல் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் மலம் சலம் கழிப்பறை குழியில் சென்றடைகிறது அதேபோன்று Covid-19 நோயாளியாக இருந்தாலும், நோயற்றவர்களாக இருந்தாலும் அல்லது ஒரு பொருளாக இருந்தாலும் நீரால் கழுவுகின்ற பொழுது Covid-19 virus இருக்கின்ற பட்சத்தில் அது நிலத்தைத் தான் சென்றடையும், அப்போது அந்த virus க்கு என்ன நடைபெறுகின்றன என்பதை பற்றி அமைச்சர் கூறவில்லை. இறந்த ஒருவருக்கு பேச்சு, சுவாசம், இருமல், தும்மல், கழிவகற்றல் போன்ற எல்லாம் நிறுத்தப்பட்டுவிடும். ஒரு Covid-19 நோயாளி மேற்கூறிய செயல்களின் மூலம் சுழலை மாசுபடுத்துகின்ற, கழிவுகள் மூலம் நிலத்தை மாசுபடுத்துகின்ற அளவோடு ஒப்பிடும் பொழுது அனைத்தும் நிறுத்தப் பட்ட இறந்த உடலை Double sealed bag  இனுல் வைத்து அடக்கம் செய்யும் போது அது சுழலை மாசுபடுத்துகின்ற, நிலத்தை மாசுபடுத்துகின்ற தென்பது புறக்கணிக்க தக்கது.

எங்களுடைய மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் முஸ்லிம் மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பேசுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. அமைச்சர் கூறியதில் உள்ள உண்மையை புரியாத மாற்று மத மக்கள் நாம் ஒரு இனவாத கருத்துக்களை முன்வைப்பதாகத்தான் கருதுவார்கள், அதை அந்த மக்களின் தவறாகவும் நாம் கருதமுடியாது. 

அமைச்சர் விமல் வீரவன்சவின் பேச்சில் “ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இனவாத அரசியல் தேவையில்லை” என்ற கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது ஆனால் அதை சொல்லில் மட்டுப்படுத்தாமல் செயலிலும் காட்டினால் நாட்டிற்கும் நல்லது அனைத்து இன மக்களும் அவர் மீது நம்பிக்கையும் வைப்பார்கள்.

அதேபோன்று நமது மக்கள் பிரதிநிதிகள் உணர்வுகளைத் தூண்டும் பேச்சுக்களை நிறுத்திவிட்டு அறிவுபூர்வமான, ஆதாரபூர்வமான, தரவுகள் நிறைந்த பேச்சுக்களை பேசவேண்டும் அப்போதுதான் இனவாதிகளுக்கு தீனி போடுவதை நிறுத்த முடியும்.

Brunei இல் March ஒன்பதாம் திகதி முதல் Covid-19 தொற்றுக்குள்ளான நபர் கண்டுபிடிக்கப்பட்டு, April மூன்றாம் திகதி அதன் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்தது. August 30ம் திகதி அதன் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்திருக்கின்றது அதாவது கடந்த ஐந்து மாதங்கள் Covid-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் 10 பேர் மாத்திரமே. அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று, 

அதேபோன்று Taiwan இல் பெப்ரவரி 15ம் திகதி முதன் முறையாக Covid-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் 15 பேர் கண்டு பிடிக்கப்பட்டார்கள் மே மாதம் முதலாம் திகதி அதன் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்தது. ஓகஸ்ட் 30ம் திகதி அதன் எண்ணிக்கை 488 ஆக உயர்ந்தது அதாவது கடந்த நான்கு மாதங்களில் 59 மேலதிக தொற்றுக்கள். இது வரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7.

இலங்கையில் முதலாவது இலங்கையர் Covid-19 தொற்றுக்குள்ளானதை கண்டுபிடிக்கப்பட்டது மார்ச் மாதம் 11ம் திகதி, மே மாதம் முதலாம் திகதி அதன் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்தது. ஓகஸ்ட் 30ம் திகதி அதன் எண்ணிக்கை 3012 ஆக உயர்ந்தது. அதாவது கடந்த நான்கு மாதங்களில் 2324 கொறோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 12.

குறிப்பாக தாய்வான் சன அடர்த்தியான சிறிய நாடு அதாவது இலங்கை சனத்தொகையை விட சற்று அதிகமாகவும் நிலப் பரப்பில் இலங்கையின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட அரைவாசி. அவ்வாறு இருந்த போதிலும் மிகவும் வெற்றிகரமாக Covid-19ஐ  கட்டுப்படுத்தியுள்ளார்கள்.

அதேபோன்று Bhutan, நியூசிலாந்து. தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, அனேகமான ஆபிரிக்க நாடுகள் மிகவும் வெற்றிகரமாக Covid-19ஐ கட்டுப்படுத்தியுள்ளார்கள்.

மேற்கூறிய அனைத்து நாடுகளும் அடக்கம் செய்வதை அங்கிகரித்த நாடுகளாகும். 

இலங்கை ஒரு தீவு, மற்ற நாடுகளுடன் நிலத் தொடர்பு இல்லை, அதேபோன்று வெளிநாட்டவர்கள் பெரிதாக இல்லை, வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது சுற்றுலா மிகக் குறைவு அவ்வாறு இருக்கும் போது வளர்ந்த நாடுகளான அமெரிக ஐரோப்பிய நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட முடியாது, அதேபோன்று தான் அரபு நாடுகள் நிலத்தொடர்புள்ள நாடுகள், வெளிநாட்டவர்களை அதிகமாக கொண்ட நாடுகள். 

சமாந்திரமான இரு விடையங்களைத்தான் ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட முடியும் அதேபோன்று தான் ஒரு நாட்டை இன்னொரு நாட்டுடன் ஒப்பிட முடியாது காரணம் கூடுதலான விடயங்களில் ஒரு நாடு மற்றய நாட்டில் இருந்து வேறுபட்டதாகத்தான் அமையும். 

எமது மக்கள் பிரதிநிதிகள், தலைவர்கள் ஆதாரபூர்வமான தகவல்களோடு அறிவு பூர்வமாக பாராளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி இதுவரையில் பேசவில்லை. அதேபோன்று இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதம மந்திரியிடம் உரிய முறையில் அணுகி இந்த ஆதாரங்களை அவர்களிடம் சமர்ப்பித்து இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சரத்து 10 இலும் 14 (1) e இலும் மற்றய மதங்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்ற உரிமைகளின் பிரகாரம் முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றான அடக்கம் செய்வதை அணுமதியுங்கள் என்று பேசாமல் கண்டனங்கள் தெரிவிப்பதிலும் நமது மக்களின் உணர்வுகளை தூண்டுவதிலு எந்தப் பிரயோசனமும் இல்லை. உணர்வுகளை தூண்டுகின்ற செயல்களும் ஒருவகையான இனவாதமே ஆகும்.

இனவாதம் இயற்கையானது அல்ல மனிதர்களால் அதிகாரங்களுக்காக உருவாக்கப்பட்டது. அனைத்து இன மக்களும் சிந்திக்க வேண்டும், நாம் அதற்கு விதிவிலக்கல்ல.

Dr. Anpudeen Yoonus Lebbe

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page