கொரோனா தொற்று பாடசாலைகளில் தீவிரம்

பல்வேறு கட்டங்களில் பாடசாலை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். 

கொரோனா நேர்மறைத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கல்வி அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்திலேயே ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாத சூழ்நிலையில், நாளாந்த கொரோனா நேர்மறை வழக்குகள் அதிகரித்துள்ளன என, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த கவலைக்கிடமான நிலை தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டுமென ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை ஒடுக்கும் நோக்கில் பாடசாலைகள் திறக்கப்பட்டதாகவும், வழிகாட்டுதல்களின்படி நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் கடிதத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுகாதாரப் பொருட்களையோ, தொற்றுநீக்கிகளையோ வாங்குவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் பாடசாலை சூழலில் இருந்து வைரஸ் தொற்றுக்குள்ளான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்கள் சொந்த செலவில் பீசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, மொத்த பீசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைக் கட்டணங்களை வழங்கவும், பணியில் இருக்கும் போது விடுமுறை பெறுவது தொடர்பில் உடனடியாக சுற்றறிக்கை வெளியிடவேண்டும் எனவும் சங்கம் தமது கடிதத்தின் மூலம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. -தமிழ் மிற்றோர்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page