ஈஸ்டர் தாக்குதல் ; ஷாரா என்ற பெண் பற்றிய உண்மையை எமக்கு தெரிவிக்க வேண்டும் ; ஐக்கிய மக்கள் சக்தி

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான உயிருடன் இருக்கும் சாட்சியாளர் ஷாரா என்ற பெண் இன்றும் இராணுவ முகாமில் உள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது இந்தியாவிற்கு தப்பிசெல்ல விட்டீர்களா என்ற உண்மையை எமக்கு தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, ஆளுந்தரப்பு உறுப்பினரும் கோபா குழு தலைவருமான கலாநிதி திஸ்ஸ விதாரணவினால் கொண்டுவரப்பட்ட பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டிருக்கும் அரச கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முக்கியமான 42 வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன, தொழிநுட்ப கோளாறு எனக் கூறி இந்த வழக்குகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு நெருக்கடி, பிணைமுறி ஊழல் என்பவற்றை கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மத்திய வங்கி ஊழல் வாதிகளையோ அல்லது ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளையோ பிடிக்க முடியவில்லை. 

ஈஸ்டர் தாக்குதல் நடத்த சில தினங்களுக்கு முன்னர் வனாதவில் பகுதியில் இரண்டு பொலிசார் கொலைசெய்யப்பட்ட வேளையில் அவர்களை கொலை செய்தது யார் என ஆராய முயற்சித்த வேளையில் அதனை விடுதலை புலிகளின் மேல் சுமத்தினர், அதேபோல் ஈஸ்டர் தாக்குதலையும் விடுதலைப்புலிகள் கணக்கில் சேர்த்து திட்டமிட்ட சூழ்ச்சி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.  

ஈஸ்டர் தாக்குதல் குறித்து கருதினால் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியும் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதியிடமும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடமும் கேள்வி எழுப்பியும் அவர்கள்  உறுதியான பதில் கூறவில்லை.

ஷாரா என்ற பெண் எங்கே என நாமும் சபையில் கேள்வி எழுப்பினோம். ஷாரா என்ற பெண் எங்கே? என்ற கேள்வி எழுப்பிய வேளையில் அவரது மரபணுவை பெற்றுக்கொண்டு அவர் இறந்துவிட்டார் என நிருப்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. 

ஷாரா என்ற பெண் இன்றும் இராணுவ முகாமில் உள்ளாரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது இந்தியாவிற்கு தப்பிசெல்ல விட்டீர்களா என்ற உண்மையை எமக்கு தெரிவிக்க வேண்டும்.

இது குறித்து கேள்வி எழுப்பும் வேளையில் எம்மை அடக்காது உண்மை என்ன என்பதை கூற வேண்டும், ஏன் அரசாங்கம் இவற்றை மூடி மறைக்கின்றது.

ஆயுதங்கள் மற்றும்  வெடி பொருட்களுடன் அன்று கைது செய்யப்பட்ட லொறி இரண்டையும் ஒரு உயர் பொலிஸ் அதிகாரியின் கோரிக்கைக்கு அமைய விடுதலை செய்யும் வேளையில் ஐந்தாயிரம் ரூபா நோட்டுகளில் கப்பம் பெற்ற நபர் யார்? அந்த லொறியின் உரிமையாளர் யார் ? குறித்த பொலிஸ் அதிகாரி ஹோட்டல் ஒன்றில் இருத்த வேளையில் அந்த  ஹோட்டலுக்கான பற்றுச்சீட்டுக்கான பணத்தை செலுத்தியது யார்? அவர் இன்று அரசாங்கத்தில் எந்த இடத்தில் உள்ளார்?

இந்த அரசாங்கத்தில் எவ்வாறான கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபட்டுள்ளார்? அவர் மீது இருந்த வழக்குகளுக்கு என்ன நடந்தது? இவ்வாறு பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலங்கையின் கிரிக்கெட் சபையின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவரேதான் இந்த நபரா?

இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் கேள்விகளாக நாம் முன்வைக்கின்றோம். அதுமட்டுமல்ல சஹாரானின் மனைவின் வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை ஏன் வெளிப்படுத்தவில்லை. அவரது வீட்டிற்கு வந்த புலனாய்வு அதிகாரி யார்? ஏன் இந்த கேள்விகளை கேட்டால் குலப்பமடைகின்றீர்கள், ஏன் எம்மை விரட்டுகின்றீர்கள்?

அச்சமடைகின்றீர்கள்? உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற  அச்சத்தில் சகலரும் அச்சமடைகின்றனர்.  தேசிய பாதுகாப்பு நெருக்கடிகளை தீர்க்க ஆட்சிக்கு வந்தவர்கள் உண்மையில் என்ன நடந்தது என கூறுங்கள் என்றார். 

-வீரகேசரி- (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page