கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நிபுணர் குழுக்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்றபோதிலும் அதில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிய வருகிறது.
நேற்றைய தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தலைமையில் சுகாதார அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பில், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காது அடக்கம் செய்வதற்கு அனுமதி
வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் பேராசிரியர்களான ரிஸ்வி சரீப், கமால்தீன் ஆகியோரும் டாக்டர்களாக ரவீந்திர பெர்ணான்டோ, வஜிர திசாநாயக்க உள்ளிட்ட நிபுணர்கள் விஞ்ஞானபூர்வமான வாதங்களை முன்வைத்தனர்.
இதேவேளை சுகாதார அமைச்சின் சார்பில் டாக்டர்களான ஆனந்த விஜேசேகர, சன்ன பெரேரா உள்ளிட்ட நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது முஸ்லிம் தரப்பினால் முன்வைக்கப்பட்ட காரணங்களை சுகாதார அமைச்சு தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரியவருகிறது.
எனினும் இந்த விவகாரம் தொடர்பில் தொடர்;ச்சியாக இருதரப்பும் கலந்துரையாடுவது என இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த சந்திப்பு அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.
நேற்று முன்தினம் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் முஸ்லிம் அணியினர் பிரதமர் மஹிந்த ராஜபக்-வை மெதமுலானையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து இவ்விவகாரம் தொடர்பில் விடுத்த வேண்டுகோளுக்கமையவே இந்த நிபுணர் குழுக்களுக்கிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.