பழிவாங்கவா அரச ஊழியர்களை பணிக்கு அழைத்துள்ளீர்கள்?

அரச உத்தியோகத்தர்களை பழிவாங்குவதற்காகவா அரசாங்கம் சகலரையும் பணிக்கு அழைத்துள்ளது? கொவிட் பரவலில் அபாயமுடைய நாடுகள் பட்டியலில் தற்போது இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணிகள் உள்ளிட்ட சகல அரச உத்தியோகத்தர்களையும் பணிக்கு அழைத்திருப்பது பொருத்தமற்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மக்களுக்கு பாதுகாப்பனவையா? கொவிட் பரவலில் அபாயமுடைய நாடுகள் பட்டியலில் தற்போது இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உலகசுகாதார ஸ்தாபனம் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றாமல் ட்ரம்ப் செயற்பட்டமையின் காரணமாகவே அமெரிக்காவில் 5 இலட்சம் மக்கள் உயிரிழக்கக் காரணமாகும். இதே போன்றுதான் பிரேசிலிலும் நடைபெற்றது. அதே நிலைமையே இலங்கையிலும் ஏற் பட்டுள்ளது.

இந்த அரசாங்கத்தினால் உரிய நேரத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படுவதில்லை. நாளொன்றுக்கு 60 மரணங்களும் 2000 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அரச உத்நியோகத்தர்கள் சகலரும் பணிக்கு அழைக் கப்பட்டுள்ளனர், தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டாலும் தடுப்பூசியைப் பெற்று சுமார் 4 வாரங்களின் பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டில் பெருமளவானோகுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி இன்னும் வழங்கப்படவில்லை.

சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதா? நாட்டில் தற்போதுள்ள நிலையில் கர்ப்பிணிகளும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளமை பாதுகாப்பானதல்ல. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் அரச உத்தியோகத்தர்களை பழிவாங்குவ தற்காகவா முன்னெடுக்கப்படுகிறது? அரச உத்தியோகத்தர்களில் 60 வீதமானோர் தற்போதைய அரசாங்கத்திற்கே வாக்களித் துள்ளனர். எனவே அவர்களை பழிவாங்கும் வகையிலான செயற்பாடுகள் பொறுத்தமற்றவை

தடுப்பூசி வழங்குவதால் மாத்திரம் அபாய நிலைமையை சுட்டுப்படுத்த முடியாது. உண்மையில் தற்போது அரசாங்கத்தின் தேவை தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதா அல்லது மேலும் அதிகரிப்பதா? இந்த சந்தர்ப்பத்நிலாவது அரசாங்கம் சரியான நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார். (எம்.மனோசித்ரா)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page