மக்கள் என்ன காகங்களா ? வர்த்தக அமைச்சர் பந்துலவிடம் எதிர்க்கட்சி கேள்வி

குடும்பம் ஒன்றுக்கு  14 நாட்களுக்கு மூன்று கிலோகிராம் அரிசி போதுமானது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மூன்றுவேளை சோறு உண்ணும் எமது நாட்டில் நான்குபேர் கொண்ட குடும்பமொன்றில் ஒருவருக்கு ஒரு வேளைக்கு 17 கிராம் என்ற ரீதியில் அரிசியை பங்கிட்டு உண்ண மக்கள் என்ன வீட்டுக் குருவிகளா அல்லது காகமா என எதிர்க்கட்சி உறுப்பினர் துஷார இந்துநில் அமரசேன சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றதில் இன்று புதன்கிழமை, வாய்மூல விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் துஷார இந்துநில் அமரசேன வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் கேள்வி ஒன்றை எழுப்பினர், ” ஒரு குடும்பத்திற்கு மூன்று கிலோகிராம் அரிசி 14 நாட்களுக்கு போதுமானது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

மூன்று கிலோ என்றால் மூவாயிரம் கிராம் என்பது அனைவரும் அறிந்ததே, இதனை 14 ஆல் வகுத்தால் ஒரு நாளைக்கு 214 கிராம் என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும். சாதாரணமாக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் என்றால் ஒரு நபருக்கு 71 கிராம் என்ற அடிப்படையில் பங்கிட வேண்டும். 

இலங்கை போன்ற நாடுகளில் நாம் மூவேளையும் சோறு உண்பவர்கள். ஆகவே நான்குபேர் கொண்ட குடும்பம் ஒன்றில் ஒரு வேலைக்கு ஒருவருக்கு 17 கிராம் என்ற ரீதியில் அரிசியை பங்கிட்டாக உன்ன வேண்டும். இந்த 17 கிராம் அரிசியில் ஒருவரது வயிறு நிறையும் என நினைக்கின்றீர்களா? மக்கள் என்ன வீட்டுக் குருவிகளா அல்லது காகமா. காகத்துக்குக் கூட 17 கிராம் அரிசி தேவைப்படும். எந்த அடிப்படையில் இந்த கணக்கை கூறினீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன,

நான் கூறாத ஒரு விடயத்தை கூறியதாக இந்த சபையில் கூறுகின்றார். இவ்வாறு நான் எப்போது எங்கே கூறினேன் என்பத்தை ஆதாரத்துடன் கூறுங்கள். பாராளுமன்றத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இவர்களே தான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மக்களை கொலை செய்து முதலைக்கு போடுகின்றார் என குற்றம் சுமத்தினர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 2,500 ரூபா இருந்தது 3,000 மாக நான் மாற்றினேன். அதற்கே தவறான விமர்சனங்களை இவர்கள் முன்வைத்தனர். எனவே சபையில் முட்டாள்கள் போல் நடந்துகொள்ள வேண்டாம் என்றார். -வீரகேசரி பத்திரிகை-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page