சீனாவை விஞ்சிய இத்தாலி; மத்திய கிழக்கு நாடுகளின் நிலை என்ன? ஒரு அலசல்

கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 427 அதிகரித்து மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.

தங்களது நாட்டில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் 3,245 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்தாலும், அந்த தரவின் உண்மைத்தன்மை குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஸ்பெயினில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இத்தொற்றால் சுமார் 20,000 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1002 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் இதுவரை 1,433 பேர் உயிரிழந்துள்ளனர். 19,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கு அறிவிக்கப்பட்ட இரண்டு வார பொது விடுமுறையில் மக்கள் வீட்டிலேயே தங்கினால், வைரஸ் பரவுவதை தவிர்க்க முடியும் என அதிகாரிகள் நம்புகிறார்கள்.

சௌதி அரேபியாவில் 238 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மெக்கா மசூதியிலும் மெதினாவில் உள்ள நபிகள் நாயக மசூதியிலும் தொழுகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மசூதியின் சுற்று வட்டார பகுதிகளிலும் கூட்டமாக தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு இஸ்ரேல் நாட்டு உச்ச நீதிமன்றம் ஒரு புதிய பாராளுமன்ற குழுவை நியமித்துள்ளது. நாட்டின் அவசர நிலை கருதி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இந்தக் குழு முடிவு செய்யும். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொபைல் தரவுகள் மூலம், அவர்கள் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க அந்நாட்டின் பாதுகாப்பு முகமைகள் உதவ உள்ளன. சௌதியில் இதுவரை 705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

எகிப்தில் மட்டும் 196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை எகிப்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கைரோ சிறையில் சட்டத்தை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 4 பேரை சிறை அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

இதுவரை இல்லாத நிலையில், ஹாங்காங்கில் ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

எனினும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து சீனாவே முன்னிலையில் உள்ளது. இதுவரை சீனாவில் கொரோனா வைரஸால் 81,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலியில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 41,035 ஆக உள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் 12 ஆம் திகதி இத்தாலியில் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முடக்கம் வரும் 25 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் பெரும்பாலான பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த முடக்கத்தின் காரணமாக வீடுகளுக்குள்ளேயே இருந்த நிலையிலும், அந்த நாட்டில் கட்டுக்கடங்காத அளவுக்கு கொரோனா வைரஸ் பரவல் இருந்து வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,038 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மேலும், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246,276 ஆக உயர்ந்துள்ளது.

தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான வெளிநாடுகளில் வசித்து வரும் தென் கொரியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் தத்தமது நாடுகளுக்கு திரும்பி வரும் சூழ்நிலையில், இந்த நாடுகளில் இரண்டாவது முறையாக கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையில் திடீர் ஏற்றம் ஏற்பட கூடும் என்று கருதப்படுகிறது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தங்களது குடிமக்கள் அல்லாதோரை தவிர்த்து மற்றவர்களுக்கு நாட்டின் எல்லைகளை மூடியுள்ளன.

அமெரிக்காவில் இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு மட்டுமின்றி இந்த நோய்த்தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் ஊதியத்தை உறுதிசெய்யும் திட்டம் உள்ளிட்டவற்றிற்காக 100 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, நான்கு கோடி மக்கள் தொகை கொண்ட கலிஃபோரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதே விகிதத்தில் உயர்ந்தால் அடுத்த மூன்று மாதங்களில் சுமார் இரண்டு கோடி மக்கள் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட கூடும் என்று அந்த மாகாணத்தின் கவர்னர் கேவின் நியூசோம் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 205 பேர் உயிரிழந்துள்ளனர்; 14,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உலகின் பல்வேறு நாடுகள் தத்தமது நாடுகளில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடைவிதித்துள்ள நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்தை உடனடியாக நிறுத்துவதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது. மேலும், ரயில்கள், பேருந்துகள், வாடகை கார் சேவைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் இதுவரை 270 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.

பெருந்தொற்று நோயான கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஐரோப்பிய மத்திய வங்கி 820 பில்லியன் டொலர்கள் கொண்ட அவசர தொகுப்புதவி திட்டத்தை அறிவித்துள்ளது.

தென் அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் முடக்கத்தை அறிவித்த முதல் நாடாக அர்ஜெண்டினா உருவெடுத்துள்ளது. இதன்படி, மார்ச் மாத இறுதிவரை உணவு மற்றும் மருத்துவத்தை தவிர்த்து வேறெந்த காரணத்திற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page