இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மின்சார கட்டணம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள், காயத்துக்குள்ளானவர்கள் குறித்து கேள்வியுற்றுள்ளோம். ஆனால் மின்சார பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்களை தற்பொழுது தான் காணக்கூடியதாக உள்ளது.

அதாவது நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து நாடு மூன்று மாத காலம் முடக்கப்பட்டது. அதாவது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நிலையில் அவர்களின் மின்சாரக் கட்டணங்களையோ அன்றேல் , தண்ணீர் கட்டணங்களையோ உரிய தினத்தில் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

அதேவேளை ஊரடங்கு காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது போனதையடுத்து எவருக்கும் மாத சம்பளத்தையோ, நாட் சம்பளத்தையோ பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.  

அதுமாத்திரமன்றி மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், வீட்டு வாடகைக் கட்டணம் என்பவற்றுக்கு ஒதுக்கி வைக்கப்பட்ட பணத்தை அந்த மூன்று மாத காலம் உணவுக்காகவும் இதர அத்தியாவசிய தேவைக்காகவுமே மக்கள் செலவிட்டனர்.  இதனைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. இந்த நிலையில் அரசாங்கம் வழங்கிய ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணமும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை.

இந்த இறுக்கமான சூழலில் சாதாரண வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தனர். அன்றாடம் மூன்று வேளை உணவை தேடுவதே முடியாத காரியமாகவும் விளங்கியது.

இவ்வாறு துயரத்தின் விளிம்பிற்கு சென்ற மக்களுக்கு ஊரடங்கு தளர்வும் ஊர் முடக்கமும்  நீக்கப்பட்டமையும் பெரும் ஆறுதலாக அமைந்தது. இதனையடுத்து மக்கள் சற்று சுவாசிக்க ஆரம்பித்தனர்.

மீண்டும் வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பித்தன. போக்குவரத்துகள் சுமுகமாகின. அலுவலகப் பணிகள் ஆரம்பமாகின. இதேவேளை மின்சார கட்டணம், நீர் கட்டணம் அடங்கிய நீண்ட பட்டியலும் அவரவர் இல்லங்கள் நாடி வந்தன. இதனைக்கண்ட பாவனையாளர்கள் ஒருகணம் மின்சாரம் தாக்கிய உணர்வை எதிர்நோக்க நேர்ந்தது.

அதிகமானவர்களுக்கு 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரை மின்சாரக் கட்டணங்கள் நிலுவையாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

இவ்விவகாரம் நாட்டில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விடயமாக இன்று மாறியுள்ளது. இதனையடுத்து கட்டணத்தை செலுத்த மேலும் இரண்டு மாத கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இதேவேளை ஏதாவது சலுகை வழங்கி இந்த கட்டணத்தை  அரசாங்கம் குறைக்க மாட்டாதா ? என மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். 

இவற்றுக்கு மத்தியில் அடுத்த கட்டம் என்ன ? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு, அரசாங்கம் ஏதேனும் நிவாரணம் வழங்க  விரும்பினால்,  மின்சாரக்கட்டணம் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக உள்ளது.

அதேவேளை அரசின் செலவினங்களை சீர்செய்ய மக்கள் மீது சுமைகளை சுமத்தி அரசு தப்பிக்கக் கூடாது என்பதும் அனைவரதும் கோரிக்கையாகும்.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page