அரசியல் ஆணவத்திற்குள் சிக்குண்டு, சிதறிப்போன பள்ளிவாசல்

கடந்த செவ்வாயன்று (25.08.2020) பள்ளிவாசல் துறை, கற்பிட்டி என்ற பிரதேசத்தில் சுமார் 07 ஆண்டுகளாக இயங்கிவந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியின் உட்பகுதியில் அப்பள்ளிவாசல் நிருவாக்கத்தினால் அமைக்கப்பட்ட மதில் ஒன்று கற்பிட்டி பிரதேச சபை தலைவரின் ஆணவப் பசிக்குள் சிக்குண்டு சுக்குநூறாகியது.

மேலும் குறித்த பள்ளிவாசல் நிறுவனத்தினர் கல்பிட்டி பிரதேச சபை தலைவரிடம் சுற்று மதில் கட்டுதல் மற்றும் தனது பள்ளிவாசலின் அங்கத்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியினைக் கேட்டு சென்றவேளை, அப்பள்ளிவாசல் நிருவாகிகளை அலைக்கழித்தது மட்டுமன்றி தகாத வார்த்தைகளினாலும் வஞ்சித்துமுள்ளார். மேலும் உங்களால் எனக்கு எவ்வித அரசியல் இலாபமும் இல்லை. உங்களுக்கு எதற்காக செய்துதரவேண்டும்? என்று அரசியல் இலாபமும் பேசி காவலர்களின் மூலம் அப்பள்ளி நிருவாகிகளை வெளியேற்றியும் உள்ளார். அதனைத் தொடர்ந்து அக்குறித்த பள்ளிவாசல் நிருவாகிகள் போலீஸ் முறைப்பாடு ஒன்றினைச் செய்ய போலீஸிற்கு சென்ற வேளை தனது அரசியல் அதிகாரத்தினைப் பயன்படுத்தி தடுத்துமுள்ளார்.

மீண்டும் மூன்று மாதங்களின் பின்னர் அரசியலினால் பழிவாங்கப்பட்ட அப்பள்ளிவாசல் நிருவாகிகள் தங்களது சுற்றுமதில் கட்டுமானத்தினை மேலும் 5 அடிகள் தனது சுற்று வேலியின் உட்பகுதியில் ஆரம்பித்தனர். சுற்று மதில் வேலைகள் ஆரம்பித்ததை தனது ஆதரவாளர்களின் மூலம் அறிந்துகொண்ட பிரதேச சபைத் தலைவர் தனது சகாக்களுடன் அக்குறித்த பள்ளிவாசலினுள் அத்துமீறி உட்பிரவேசித்து நிருவாகி ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்து இன்னும் இரண்டு அடிகள் உங்களால் உள்ளே எடுத்து கட்ட முடியாதா? நான் கூறியதை கேட்கவில்லைதானே, இன்னும் இரண்டு மணித்தியாலத்திற்குள் இச்சுற்று மதிலை எனது சொந்தப் பணத்தை செலவழித்தாவது உடைத்தெறிவேன் என்று அப்பள்ளிவாசல் நிருவாகியை அடிக்காத குறையாக வஞ்சித்து சென்றுள்ளார்.

பின்னர் போலீஸில் தனது பிரதேச சபை தலைவர் என்ற மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரத்தினை  பயன்படுத்தி அங்கு வேலை செய்யும் அதிகாரி ஒருவரை போலீஸில் முறைப்பாடு ஒன்றை செய்ய வற்புறுத்தியுள்ளார். அப்பிரதேச சபை தலைவரின் தூண்டுதலில் சென்ற  அந்நபர் அக்குறிப்பிட்ட சுற்றுமதிலை உடைப்பதற்கான அனுமதியினை போலீஸிடம் கேட்டுள்ளார். போலீஸ் அதனை மறுக்க நாங்கள் எங்களது அதிகாரத்தினைப் பயன்படுத்தி உடைகின்றோம் எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் என்று போலீஸிடம் கேட்டு போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுமதிலை உடைத்றிந்தனர்.  

மேலும் அப்பகுதியில் பல முறைகேடான கட்டிடங்கள் காணப்படினும் அது தனது ஆதரவாளர்களின் கட்டிடங்கள் என்பதனால் கண்டும் காணாதது போன்று இருக்கின்ற அதேவேளை அக்குறித்த பள்ளிவாயலின் சுற்று வெளியின் உட்பகுதியில் கட்டப்பட்ட சுற்றுமதிலை உடைத்து தனது ஆதரவாளர்களின் மனத்தைக் குளிரவைத்துள்ளார்.

மக்களே அரசியல் அராஜக போக்கைக் கொண்ட அரசியல் வாதிகளின் செயட்பாடுகளில் இருந்து விழிப்பாக இருந்து கொள்ளுங்கள். இவர்களா எமது பாதுகாப்பினையும் அபிவிருத்திகளையும் பாதுகாக்க போகின்றனர். அரசியல் இலாபத்திற்காக இறைவனின் மாளிகையில் கைவைக்க துணிந்தவர் எம்மை விற்று தனது தனது அரசியல் இலாபத்தினை அடையும் சந்தர்ப்பம் வந்தால் அதையும் எவ்வித சலனமும் இன்றி செய்வார் என்பதில் நாம் எவ்வித சந்தேகமும் கொள்ளத்தேவை இல்லை.

அரச அதிகாரிகளே நீங்கள் இவ்வாறான அரசியல் வாதிகளுக்கு சேவை செய்யவா பதவியில் உள்ளீர்கள் அல்லது ஜனாதிபதி தெரிவிப்பதை போன்று மக்களின் நலனுக்காக சேவை செய்ய வந்துள்ளீர்களா?

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page